Thursday, 25 August 2016

நடை

மரித்தாள் மனைவி
காசநோயில் வீழ்ந்து.
உடன் மரித்தன
உறவும் நட்பும்.

கையில் காசில்லை.
ஆயின்
தோளில் வலுவுண்டு.

பஞ்சாய்க் கிடந்தவளை
மூட்டையாய்ச் சுமந்தேன்
மகளே வழித்துணையாய்.

வழியெங்கும் கைகட்டி
வேடிக்கை பார்த்தன
மனிதத்தோல் போர்த்திய
மிருகங்கள்.
அவற்றின் பிடறியின்
பின்னால்
மறைந்து கொண்டது
மானுடம்.

இருவரால் பிறந்த அவள்
என் ஒருவனால்
போய்ச் சேர்ந்தாள்.

நான் மரிக்கையில்
இப்படி என்னைச் சுமக்க
இயலுமா எனும் கேள்வியோடு
மகளும் நடக்க
துழாவித் தேடினேன்.

எங்கேயும் காணவில்லை
கடவுள் நீட்டிய
அபயக்கரத்தின் நிழல்.

Monday, 22 August 2016

நிலமென்னும்...

தனுஷ்கோடி.

கடைகள், பயணிகள் என மக்கள் கூட்டம் இருந்தாலும் அங்கு நிலவிய மயான அமைதி (eerie silence)  இயற்கை மனிதனுக்கு அவ்வப்போது விடும் அறைகூவலாகத்தான் தெரிகிறது.

ரயில் விபத்தும், புயலின் சீற்றமும் அது குறித்த பத்திரிக்கைச் செய்திகளும் மனத்திரையில்  நிழலாடின.

மரண ஓலம் காற்றில் கலந்து தேய்ந்து இன்னமும் மிச்சமிருப்பதாகவே தோன்றியது.

இடிந்த கட்டிடங்களும் புகையிரதப் பாதையின் எச்சமும் மனிதனுக்குத் தெரியாத மொழியில் இயற்கையின் கோபத்தை இன்றளவும் மொழிபெயர்க்கின்றன.

இலங்கையில் ஏற்பட்ட ஆழிப் பேரலையில் ஒரு தொடர்வண்டி முழுவதுமாகக் கடலுள் அடித்துச் செல்லப்பட்ட அவலத்தை ஒரு நினைவுச்சின்னம் மூலம் காட்சிப் படுத்தியிருப்பதைப் போல நாமும் தனுஷ்கோடியில் செய்திருந்தால் வருங்காலத் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும்.

இயற்கையை எவ்வளவுதான்  வாஞ்சையோடு அன்னை என்று நாம் அழைத்தாலும் நாமிழைக்கும் தீங்குகளுக்கு அவள் பழி தீர்க்கையில் 
கொடுங்கோல் சிற்றன்னையாகவே
ஆகிவிடுகிறாள்.

நிலமென்னும் நல்லாள்?

விழியில் விழுந்து மனதில் பதிந்து...

சென்று வர இனிமை.
தங்கி விடல் கொடுமை.
தனிமை.

இருக்கட்டும்.

சில சமயங்களில் தனிமை நமக்குத் தேவைப்படத்தான் செய்கிறது. தளர்வான தருணங்களில் மனது கிடந்து தவிக்கும் போது அந்தக் காலத்து அரசர்களைப் போல "ஏகாந்தம்" என்ற ஒரு குரலுக்கு எல்லோரும் விலகிவிட்டால் நன்றாகத்தான் இருக்கும். சாத்தியமா என்ன?

பதுங்கி வாழும் போராளிகளும் தலைவர்களும் சீக்கிரமாகத் தளர்ந்து போவதும் அதனால்தான். "Manic Depression" என்றவகை மனச்சோர்வு தொடர் தனிமையால் ஏற்படும் என்கிறது மருத்துவ அறிவியல்.

என்ன செய்வது! தனிமை தரும் தற்காலிக உவகை கூட இனியது தான்.

நான் பயணங்களை அதிகம் விரும்புவன். தானே நெடுந்தொலைவு வாகனத்தை ஓட்டுவதில் எனக்கு அலாதிப் ப்ரியம் உண்டு.

காரணம்?

பயணமெங்கும் இயற்கையின் கொடையை உணரலாம். இசையின் பரிமாணங்களை ரசிக்கலாம். சாமரம் வீசும் மரங்களின் புத்துயிர்க்காற்றை உள்ளிழுத்தல் ஒரு சுகம். பறவைகளின் கான மழையில் நனையலாம்.

ஆனால் நாம் தான் இயற்கையை எதிர்த்து அனுதினமும்  கதவடைப்பு நடத்துபவர்களாயிற்றே. மழைக்கு குடையென்னும் கருப்புக்கொடி காட்டுபவர்களாயிற்றே. குளிரூட்டியின் செயற்கைக் குளிர்காற்றுக்காக தென்றலுக்கு தடைபோடுபவர்கள் ஆயிற்றே.

விழி விரித்து என்றாவது அழகின் சிரிப்பை நமது மனத்திரையில்  பதிந்திருக்கிறோமா? இல்லையே. கண்களில் ஏந்த வேண்டிய காட்சிகளின் எழிலை கேமிரா என்ற செயற்கைத் திரையில் பதிப்பதே நம்மில் பலருக்கு கடமையாகி விட்டது.

வானவில்லை நேரில் பார்க்கையில் கிடைக்கும் பரவசம் புகைப்படத்தில் பாதி கூட கிடைப்பதில்லை. ஆனால் நமக்கோ தான் பார்த்து ரசித்த அழகோவியத்தை எல்லோரும் நேரில் சென்று பார்க்க முடியாது என்பதால் புகைப்படம் மூலம் பகிர்தல் சரியே என்பர் பலர். மறுப்பில்லை.  ஞாபகங்களுக்கு புகைப்படம் அவசியமே.

ஆனால் விழித்திரைக்கும் நமது மன அரங்குகளில் இட ஒதுக்கீடு தேவை என்பது என் கட்சி.

ஒரு வழக்கு நிமித்தம் நான் முன்பு
திருநெல்வேலி சென்றிருந்த போது
இந்த சிந்தனைகளே துணையாய் ஒரு சாலை வழிப்பயணம்.  தனியனாய்.
போகவும் வரவும் நிறைய அவகாசம் எடுத்துக்கொண்டேன். இயற்கை உபாசனைக்காக.

இசை தவிர்த்தேன். தொ(ல்)லை பேசியின் வாயமர்த்தினேன். விழியும் செவியும் மகிழ அலுக்காமல் விருந்தைப் பக்குவமாக பரிமாறிய பாங்கு இயற்கையின் மாட்சி.

கண்களால் படம் எடுத்து மனத்திரையில் இருத்தி மகிழ்ந்து பின் நினைவுக்காக சில புகைப்படங்களைப் பதிந்தேன். யான் பெற்ற இன்பம் நான் பெற்றவள் துய்க்க.

அந்நேரத்தில் வானம் காட்டிய மாயாஜாலக் காட்சியைப் பார்க்கும் போது எனக்கு உடையவர் ராமானுஜரின்  கோட்பாடு தான் நினைவுக்கு வந்தது.

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஐக்கியமாவதே முக்தி என்பது அதன் சாரம். இப்போது  இந்தப்
புகைப்படங்களைப் பாருங்கள்.

இயற்கை படைத்தவையும் மனிதன் படைத்தவையும்  ஒருசேர சந்திக்கும்
அந்தி வானம் ஒருவேளை எதையோ நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறதோ?

வாசி....

சொந்தமாக வாங்கியோ, பரிசாக அடைந்தோ, இரவலாகப் பெற்றோ அல்லது நூலகம் மூலமாக வாங்கியோ-

பிடித்தோ பிடிக்காமலோ-
ஒரே மூச்சிலோ அல்லது வசதியான தவணைகளிலோ, அச்சு வடிவான
புத்தகமாகவோ அல்லது மின்நூலாகவோ,
நாம் எத்தனையோ புத்தகங்களைப் வாசிக்கிறோம்.

எல்லா புத்தகங்களும் நம்மை கவர்வதில்லை. ஈர்ப்பதில்லை.

சில எழுத்தாளர்கள் எதை எழுதினாலும் படிக்கிறோம். மற்றவர்களின் படைப்புக்களையோ யாரும் பரிந்துரைத்தால் மட்டுமே படிக்கிறோம். மற்றும் சில நூல்களை பயணம், காத்திருத்தல் போன்ற தருணங்களில் மட்டுமே புரட்டுகிறோம்.

சில புத்தகங்கள் நம்மை அப்படியே புரட்டிப்போட்டுவிடுகின்றன. சில நூல்கள் மயிலிறகாய் நம் மனதை வருடுகின்றன. சில புத்தகங்கள் நம்மைச் செம்மைப் படுத்துகின்றன. சில நூல்கள் நமக்கு வழிகாட்டியாகின்றன.

நான் புத்தகங்கள் நிறையப் படித்தவன்தான். குறு நூலகம் ஒன்று எங்கள் இல்லத்தில் நிரந்தர கொலு வீற்றிருக்கிறது. ஆனால் தற்போது எனக்குள்ள வாசிப்பு ஆர்வம் பார்க்கும் புத்தகத்தின் கருப்பொருளைப் பொருத்தே அமைகிறது.

சமீபத்தில் நான் படித்த இரண்டு புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை என்பேன்.

1. The Zahir - Paulo Coelho எழுதியது.

அது ஒரு புதினம். அதன் வாசிப்பு அனுபவம் அலாதியானது. அதை மற்றொரு தருணத்தில் பகிர்கிறேன்.

2.    Wise and Other Wise.  Sudha Murthy எழுதியது.

மூத்த வழக்குரைஞர் திரு.  A. ஆறுமுகம் அவர்கள் என் மகளுக்காகப் பரிந்துரைத்துக் கொடுத்த புத்தகம். என்னையும் படிக்கச் சொன்னார். செய்தேன்.

நெகிழ்ந்து போய் நிற்கிறேன். அது ஒரு நெடுங்கதையோ, கவிதையோ அல்லது காவியமோ அல்ல. நாளிதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

புத்தகத்தின் முதற் சிறப்பு அதன் எளிமையான நடைதான். தான் சந்தித்த மனிதர்களிடமிருந்தும் தனக்கேற்பட்ட அனுபவங்களிலிருந்தும் தன்னைப் பாதித்த நிகழ்வுகளிலிருந்தும் பல விஷயங்களை அவர் எளிமையாகவம் அதே சமயம் தெளிவாகவும் பதிவு செய்துள்ள பாங்கு சிறப்பானது.

இந்தியாவில் கன்னித் தாய்களின் அவல நிலை குறித்த கருத்தாகட்டும், தன்னம்பிக்கையின் அருமை குறித்த கட்டுரையாகட்டும், ஸ்காண்டிநேவிய நாடுகளில் பெண்களுக்குரிய சம உரிமை பற்றிய பார்வையாகட்டும், சமூகத்தில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டியதைக் குறித்த கருத்தாகட்டும், விலைமாதுக்களின் மறுவாழ்வுக்கான வழியாகட்டும்,  நோபல் பரிசு பற்றிய எழுத்தாகட்டும், மிண்ணணுக்கருவிகளில் இளைய சமுதாயம் முடங்கியுள்ளதைப் பற்றிய கருத்தாகட்டும், மழையில் ஆடிக்களித்த பிச்சைக்காரனிடம் வாழ்க்கைப்பாடம் கற்ற ஒரு பெண்ணின் கதையாகட்டும், ஜான்சி ராணி பற்றி ஏதுமறியா இளைய தலைமுறையைப் பற்றிய கட்டுரையாகட்டும், தொழு நோயாளிகளைப் பற்றிய கரிசனமாகட்டும், அடுத்த தலைமுறையின் தன்னம்பிக்கை பற்றிய பெருமிதமாகட்டும், சுதா மூர்த்தி அவர்களின் பார்வையும் தெளிவும் புதிது.

வயது வித்தியாசம் பாராமல் படிக்கவேண்டிய மற்றும் பரிசளிக்கத்தக்க புத்தகம்.  வாசிக்க வேண்டியது அவசியம் என்பேன்.

A deserving salute to life. Her life too.

Tuesday, 2 August 2016

வைகறை மேகங்கள்...

கலைத்துப் போட்ட
சீட்டுக்கட்டாய்
மேகம்.

துடைத்து வைத்த
வெள்ளித் தட்டாய்
வானம்.

சிறகு விரித்த
சேய்ப் பறவையாய்
மனம்.

இந்த வித்தையை
முகிலினம்
யாரிடம் கற்றது?

இந்த ஜாலத்தை
கதிரவன்
எங்கே பெற்றான்?

இனிது இனிது
வைகறை
வான் இனிது.

Monday, 1 August 2016

கோதை ஆண்டாள்

நாங்களும் என் சகோதரர் வழக்குரைஞர் திரு. சுந்தர் சீனிவாசன் குடும்பமும் திருவில்லிப்பத்தூருக்குப் பயணித்தோம்.

பயண வழியில் நெடுகிலும் இரு குடும்பத்தாரும் பல விடயங்களைப் பற்றிப் பேசிவந்தாலும் எங்கள் மனது முழுவதும் நிறைந்திருந்தது ஆண்டாள் மட்டுமே.

'கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்' என்றான் கண்ணதாசன்.  கோதையின் சொற்கள் 'அமுதனைய சொற்கள்' என்றான் பாரதி. ஆண்டாளின் தமிழ் எளிய தமிழ். அழகுத்தமிழ்.

திருப்பாவை  30 மற்றும் நாச்சியார் திருமொழி 143 என ஆண்டாள் இயற்றியது மொத்தம்173 பாசுரங்கள் மட்டுமே. ஆனால் அவை ஒவ்வொன்றும் தெள்ளு தமிழ் தேனமுது.

பெரியாழ்வாரான பட்டர் பிரானின் சகோதரரின் நேரடி வாரிசான திரு. அனந்தராம கிருஷ்ணன் எனது உறவினர். அவர் எங்களுடன் திருக்கோவிலுக்கு வந்து உணர்வு மேலிட ஆண்டாளின்  வாழ்வையும், கோவிலின் தல வரலாற்றையும், அதன் விண்ணகரத்திலுள்ள சிற்பங்களின் மேன்மையையும் சொல்லச் சொல்ல எங்களின்  கற்பனைத் தேர் எங்களை ஆண்டாள் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டுக்கே கொண்டு சென்றது.

'இங்கே தானே அவள் தெய்வக் குழந்தையாகப் புவியில் கிடந்தாள், இந்தக் கிணற்றில் தானே முகம் பார்த்தாள், இந்த நந்தவனத்தில் தானே புட்பம் பறித்து ரங்கமன்னாருக்கு பாமாலையும் பூமாலையும் சூட்டி மகிழ்ந்தாள்' என்று நானும் சுந்தர் சீனிவாசனும் பேசிப் பேசி உன்மத்தம் கொண்டோம்.

திருவரங்கத்து அகண்ட வீதிகளில் 'ரங்கா, ரங்கா' என்று அரற்றியபடி அந்த 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' அலைந்து திரிந்த நிகழ்வுகளில் எங்களின் மனமும் மகிழ்ந்து திளைத்தது.

எத்தகைய வாழ்வு! எத்தகைய வாக்கு! அப்பூமி மனிதன் தெய்வமாகிய திருத்தலம்.

கோவிலின் ஒவ்வொரு தூணும் சித்திரமும் அவளது பாசுரங்களையும் அவளது கீர்த்தியைப் பறை சாற்றும் பாடல்களையும் எடுத்துரைக்க, திகட்டாத தமிழ் நம் சிந்தையைப் பரவசப்படுத்தும் அந்த அனுபவமே தனி.

மலையாள முறைப்படி அமைக்கப்பட்டுள்ள 'கோபால விலாசத்தில்' உள்ள தேக்கு மர வேலைப்பாடுகளும் பிரதான வாயிலின் விதானத்தில் தீட்டப்பட்டுள்ள ராமாயண மகாபாரத கதைகள் பற்றிய ஓவியங்களும் பிரமிக்க வைத்தன.

மதுரை அழகர்மலையில் அகவை 85ல் பெரியாழ்வார் @ விட்டுச்சித்தர் பரம பதம் அடைந்தார். அவ்விடம் இன்றும் அழகர் கோவிலின் வெளிக் கோட்டையில் பெரியாழ்வார் நந்தவனமெனத் திகழ்கிறது.

'ஒரு மகள் தன்னை உடையேன்
       உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
     செங்கண்மால் தான் கொண்டு போனான்
பெருமகளாய்க் குடி வாழ்ந்து
     பெரும்பிள்ளை பெற்ற யசோதை
மருமகளைக் கண்டு உகந்து
       மணாட்டுப் புறஞ் செய்யும் கொலோ! '
என்ற பெரியாழ்வார் திருமொழியின் 300 வது பாசுரம் தெய்வப்பிறவியைப் பெற்றுவிட்ட ஒரு தந்தையின் பெருமையை உலகிற்கு  ஓங்கிச்சொல்கிறது.

பொங்கிப் பெருகிய நிறைவோடு விடைபெற்றோம்.

ஒன்று சொல்லியாக வேண்டும்....

ஊர் திரும்பும் போது என் மகளுக்கு ஆண்டாளின் பெயரைச் சூட்டாமல் போனதற்கு நான் வருந்தியது நிஜம்.