அந்தி மாலை
இயற்கை
களை கட்டும்.
எட்டிப்பிடிக்கத்
தூண்டும் மரங்கள்
யாருக்கோ
சாமரம் வீசும்.
எட்டாத தொலைவில்
விண்மீன்கள்
யாருக்கோ
கண் சிமிட்டும்.
பகலவனோடு
ஊடல் கொண்ட
முகில் பொதிகள்
விலகியோடும்.
முகிலோடு
கோபம் கொண்ட
ஆதவன்
மண்மகளிடம்
தஞ்சமடைந்து
மடிசாயும்.
அவசரமாக
மஞ்சள் வானம்
தன் சரிகை
உடை மாற்றும்.
மேகத்தலைப்பை
விலக்கித் தலைகாட்டி
நிலவென்னும்
நல்லாள்
நாணும்.
தயங்கித் தயங்கி
செயற்கை ஒளி
மினுக்கத்
துவங்கும்.
கால்நடைகள்
அசை போட்டபடி
சோர்ந்து
பூனை நடைபோடும்.
பரவசப் பறவைகள்
இலவச
இளையராஜாக்கள்
ஆகிவிடும்.
அட மானிடா,
பார்த்ததில்லையா?
சரி, போகட்டும்.
இன்றாவது
உனது
அகக் கண்ணையும்
திற.
இயற்கையின்
மொழிபெயர்ப்பாளர்கள்
பறவைகள்
என்ற ரகசியம்
இன்று உனக்குப்
புலப்படும்.
காதலியின் வாசம் போல
காற்றின் வாசம்
உன் சுவாசத்தைச்
செப்பனிடும்.
புறத்தில்
இருள் கவிந்து
அகத்தில்
ஒளி வரும்.
அப்போது
சில்லென்ற காற்றாய்
முகம் அறைந்து
இவ்வுலகம் கேட்கும்.
'சொர்க்கம் என்ன
விண்ணிலா
உள்ளது?'