Wednesday, 7 June 2017

மழை

மழைத்தாரைகள்
பூமியை நனைக்கும்
தருணத்தில்
சட்டென
உலகம் அழகாகும்.

மேகத்தின் மோகம்
நிமிடங்களில்
தணிந்து போகும்.

குளித்துக் களித்து
மரங்கள் எல்லாம்
தலை துவட்டும்.

பறவைகளோ
சிறகு நனைந்து
உடல் சிலிர்த்து
கிளை அடையும்.

வானமங்கை
வெண்மேக உடை
களைந்து
கார்வண்ணப்
பட்டு அணிவாள்.

கதிரவன் சற்றே
இளைப்பாற
புவியன்னை அகம்
குளிர்வாள்.

தரையெல்லாம்
நீர்நனைத்து
மண்வாசம்
உயிர்கிளரும்.

பூங்கொடிகள் புதிதாய்
தலை சிலுப்பிக்
கூத்தாடும்.

குளிர்வது பூமி
மட்டுமா?

இனிது இனிது
மழை இனிது.

1 comment: