Sunday, 3 February 2019

உயிர் மூச்சு

அந்த பலூன்
வியாபாரி
நடைபாதையில்
செத்துக்கிடந்தான்.

சற்று நேரம்
முன்பு அவனிடம்
பேரம் பேசி
வாங்கியிருந்த
ஐந்து ரூபாய் பலூன்
என் குழந்தையின்
கைகளில் தவழ்ந்து
கொண்டிருந்தது.

கொஞ்ச நேரம்
முன்புவரை
தன் மூச்சுக் காற்றை
ஊதி ஊதி
அவன் நிரப்பியிருந்த
பலூன்கள் எல்லாம்
பிடி தளர்ந்து
உயரே
பறந்து போயின.

சேதி கேட்ட
அவனின் மனைவி
பதறியடித்து
ஓடி வந்தாள்.

இவள் கையிலிருந்த
பலூன் சட்டென
வெடித்து உடைந்தது.

மூச்சு விட மறந்த
கணவனைப் பார்த்து
அவளும்
உடைந்து போன
பலூனைப் பார்த்து
இவளும்
கதறி அழுவதை
எல்லோரும்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்,
அந்த பலூன்களில் இருந்தது அவனது
மூச்சா? அல்லது உயிரா?
என்பது புரியாமல்.

கரும்பலகை மனது

யார் யாரோ வந்து
எதை எதையோ
எழுதிவிட்டுப்
போகிறார்கள்.

யார் யாரோ வந்து
அவற்றை
அழித்துவிட்டுப்
போகிறார்கள்.

என்னென்னவோ
எழுதப்படுகின்றன.
ஏதேதோ மொழிகளில்.
ஏதேதோ வடிவங்களில்.
ஏதேதோ வார்த்தைகளில்.
யார் யாருக்காகவோ...

அவை எல்லாமே
அடுத்தவர்களால்
அழிக்கப்படுகின்றன.
மேலோட்டமாக
சில சமயம்.
சுவடுகளின்றி
பல சமயம்.

அவை யாவும்
என் மீது
எழுதப்படுகின்றன.
ஆனால்
எனக்காக அல்ல.

இன்றும்
யாரோ வந்து
என்னில் எதையோ
எழுதிவிட்டுப்
போய்வி்ட்டார்.

நான்
காத்திருக்கிறேன்.
வழமையாக.
மெளனமாக.
நாளைப்
பொழுதிற்காக.

வேறு யாரோ வந்து
பழசையெல்லாம்
அழிப்பதற்காக.

புதிதாக
எதையாவது
கிறுக்குவதற்காகவும்தான்.