Tuesday, 7 January 2020

காதலைப் போற்றுதும்

அடிக்கடி கேட்கிறது
இந்தப் பல்லவி.

காற்றில் பறந்து,
பாதை மறந்து,
எங்கோ மோதி,
எங்கோ வீழ்ந்து,
மழையோடு புரண்டு,
மண்ணோடு மக்கிய
சருகானதே என் காதல்.

இருக்கட்டும்...
அதற்கென்ன?

எல்லா மொட்டும்
மலர்வதில்லை.
எல்லாப் பூவும்
காய்ப்பதில்லை.
எல்லாக் காயும்
கனிவதில்லை.

தனக்கான பூவுக்காக
வண்டுகளோ,
வரப்போகும்
வசந்த காலத்திற்காக
தென்றலோ
எங்கேயாவது
காத்திருப்பதுண்டா?

மனதோடு மரணிக்கும்
காதலும்  அப்படித்தான்.
அன்பு பருவமற்றது.
அன்பு சாவற்றது.
வெட்ட வெட்டத்
துளிர்ப்பது.

தொலைந்த காதலோ,
தொலைத்த காதலோ,
எதுவும் அன்பின் 
இறுதி யாத்திரை அல்ல.

கிடைத்திருக்கும்
துணையின் மனதில்
துளிர்க்கும் 
ஆழமான அன்பும்
இதமான நட்பும்
சுகம் தரும் சுகந்தமும்
காதல் தான்.

ஆதலால்
வாய்த்திருக்கும்
காதலைப் போற்றுதும்.

No comments:

Post a Comment