பயணம் இனிது.
அதன்
பாடங்கள்
இனியன.
முகத்தில் காற்று
அறைய அறையப்
பயணப்படு.
அது மனதை
சலவை செய்யும்.
சொட்ட சொட்ட
மழையில் நனைந்து
பயணம் செய்.
ரணத்துக்கு அது
களிம்பு.
காலாற கைவீசி
நடந்து பார்.
உள்ளே ஒரு
வசந்தம் குடி
புகும்.
குடையை மற.
மண் நனைத்த
மழைத்துளி
உடல் தழுவி
சிந்தையைச்
செப்பனிடும்.
அலுவலைச்
சற்றே தள்ளி வை.
குடும்பம் பெரிதாய்
உணர்வாய்.
நீ தானே
அவர்கள்?
எத்தனை பெரிய
வானம்?
இத்தனை நாள்
யார் மறைத்தது!
பூமிக்கு எத்தனை
யௌவனம்?
யார் பூசினார்
அரிதாரம்?
விடை பெற
முடியாக்
கேள்விகளின்
விடைகள்
பயணத்தின்
பாதையில்
பதிந்திருக்கலாம்.
பயணித்துப்பார்.
வழியெல்லாம்
போதி மரம்
அணி வகுக்கும்.
உன்னை உணர்ந்து
உன்னைப் புரிந்து
உன்னை உயிர்ப்பிக்க....
பயணி.