மழை நனைத்த
நள்ளிரவில்
மரத்தடியில்
கோலமிடும்
நிலா.
காலையில்
கோபத்தில்
வெளிநடந்து
மாலையில்
புன்னகைப்பூக்களோடு
இல்லம் திரும்பும்
கணவன் போல
வெப்பம் தணிந்த
அந்திமாலை.
நேர்கோட்டில்
ஒரு
வானவில்லென
மின்கம்பி மீது
பல வண்ணங்களில்
பறவைக்கூட்டம்.
பூமிப்பெண்ணுக்கு
மழை வரனை
தாரை வார்த்துக்
கொடுக்கும்
மேகத்தாய்.
இயற்கைப்பள்ளியில்
வெள்ளைச்சீருடை
மட்டுமே
அனுதினமும்
அணியும்
கொக்குகள்.
கடல் அலையில்
கால் நனையாது
முகம் பார்த்து
விடைபெறும்
கதிரவன்.
எங்கேயோ
எதையோ
தொலைத்துவிட்டு
அதை
எப்போதும்
அங்கங்கே
தேடித்திரியும்
மனிதனே,
கண்ணெதிரே
அரங்கேறும்
அழகின்
அணிவகுப்பை
ரசித்தறியாது
என்ன மாதிரி
வாழ்க்கையை
வரித்திருக்கிறாய்?
வாராது வரும்
மாமழையைக்
கூடவா
குடைஎன்னும்
கருப்புக்கொடி
காட்டி வெறுப்பது?
யாரிடம் இல்லை
வருத்தம்?
யாருக்கு இல்லை
குறைகள்?
சூரியனா
மறைகிறது?
பூமியல்லவா
மறைக்கிறது!
வா,
இனியேனும்
இயற்கையின்
மடி தவழ்ந்து,
கதிரவனின்
கரம் கோர்த்து,
நிலவொளியில்
நடைபயின்று,
குக்கூ மொழிபேசி,
உயிர்களிடத்தில்
அன்பொழுகி
புவியின்
புன்னகையில்
அத்தனையும்
மறப்போம்
வா.
No comments:
Post a Comment