நீலமும் சிவப்பும்
மஞ்சளும்
மாற்றி மாற்றி
ஆடை சூடும்
வானமகள்
திடீரென
சாம்பல் நிற
ஆடை கொண்டாள்.
புவிக்கு ஒரு
வெள்ளிக்
கற்றையை
அனுப்பிவைத்தாள்.
அதிர்வேட்டுச்
சிரிப்போடுதான்
அது பூமி
வந்து சேர்ந்தது.
தாய் அழுது
சேய் வந்தது
போல்
முகில் அழுதாள்.
மழை வந்தது.
சேய் அழுது
தாய் சிரிப்பது
போன்று
அப்போது
புவி சிரித்தது.
பச்சைப்பட்டாடை
உடுத்தி
பூ சுமக்கும்
சாமரங்கள்
அன்று
தலை குளித்து
ஈரம் காய
கதிரைத் தேடின.
பளிச்சென்று
ஆனது
மனமும்
தரையும்.
புல்லின் நுனியில்
திரண்டு நின்ற பனித்துளிகள்
ராமன் பாதம்
தேடிய அகலிகை
மாதிரி
கதிரோனுக்காக
காக்கத் துவங்கின.
துளைகளின்
வழியே
காற்றை
இசைபெயர்த்தன
மூங்கில்கள்.
ஈரக்காற்றில்
இன்னிசை
நடம்பயின்றது.
வசந்தத்தை
சுமந்து சென்றது.
குளித்தறியா
உயிர்களும்
திருமஞ்சனம்
கண்டன.
மண் நனைந்து
மணம் வீச
பூமிக்கு இல்லாத
அச்சம்
மனிதனுக்கு
எங்கிருந்து
வந்தது?
மழையைக் கண்டு
அவன் ஒதுங்குதல்
தகுமோ?
வருண அமிழ்தே,
ஒரு விண்ணப்பம்.
தருணத்தில் பெய்து
பூமித்தாயை
சூல்கொள்ளச் செய்.
காலம் தாழ்த்தி
அவளது
கர்ப்பத்தைக்
கலைத்து விடாதே.
எப்படி வரினும்
இனிது இனிது.
மழை மாமணி
என்றும் இனிதே.
No comments:
Post a Comment