Wednesday, 27 December 2017

பாசுரம் பரவசம்- 10

ஜூபிடர் கோள்.
பாரதக் கோட்பாட்டின் படி அது
வியாழன்.

வீனஸ் கோள்.
பாரதிய வான சாஸ்திரத்தில் அது வெள்ளி.

இவ்விரு கோள்களையும் இரவிலும், விடியும் முன்னும் தொலைநோக்கி இன்றி வெறும் கண்களால் பூமியிலிருந்து நம்மால் பார்க்க முடியும்.

இன்றைக்கு 1300 வருடங்களுக்கு முன்பே தமிழச்சி ஒருத்தி அதைப் பார்த்தாள். அற்றைத் திங்கள் பின்னிரவில் விண்ணில் விளைந்த அந்த வினோத நிகழ்வைப் பார்த்து வியந்ததோடு நில்லாமல் அதைப் பைந்தமிழில் பாடியும் இருக்கிறாள்.

அவள் யார்?

அவள் 'கோதையாகிய, நாச்சியாரென்ற நம் ஆண்டாள்'!

அவள் தன் பக்தியால் பரமனை ஆண்டாள்.

தனது பாசுரங்களால் தமிழை ஆண்டாள்.

இவ்விரண்டாலும் நம் உள்ளங்களை எல்லாம் ஆண்டாள்.

ஆண்டாள் சொல்லியுள்ள அந்த விண்வெளி மாற்றத்தை இன்றைய திருப்பாவைப் பாசுரத்தில் பாருங்கள்.

அறிவியலில் ஆர்வம் கொண்டார் கூட தற்காலத்தில் அத்தகைய அரிய நிகழ்வுகளைக் கண்டு கொள்ளாமல், 'சின்னத்திரையிலும்', 'குட்டித்திரையிலும்'  தம்மைப் புதைத்துக் கொண்டு 'சன்ரைஸ்' என்பதை காபிக் கோப்பையில் மட்டுமே காணும் நாள் இது.

ஆனால் கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட  அத்தகைய ஓர் அரிய விண்வெளி நிகழ்வை நாச்சியார் தன் திறன் கொண்டு கண்டுணர்ந்து தன் பாசுரத்தில் தக்கதொரு தருணத்தில் 'நச்' என்று ஒற்றை வரியில் பாடியிருக்கிறாள்....

அதை வைத்து அவள் வாழ்ந்த காலத்தைத் நம்மால் துல்லியமாகக் கணிக்க முடிகிறது.

வானவியல் படி 'வியாழன்' ஒளி இழந்து மங்கிய போது 'வெள்ளி' முளைப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வு.

அதை அவதானித்து ஆண்டாள்
இப்பாசுரத்தை எழுதிய நாள் என்பது கி. பி. 716ம் வருடம், டிசம்பர் மாதம், 18ம் தேதி என்றும், அன்றைய தினம் முழு நிலவு தினம்/பௌர்ணமி என்றும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதோ இன்றைய தினத்திற்கான அப்பாடல்:
-------------------------
"புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக்களைந்தானைக் கீர்த்திமைப் பாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்!
'வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று'!
புள்ளும் சிலம்பின காண்!
போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ?
பாவாய் நீ நன்னாளால்.
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்!"

பொருள்;

பறவை உருக்கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து கொன்ற கண்ணன் மற்றும், இராவணனுடைய பத்துத் தலைகளையும் கிள்ளியெறிந்து அவனை வதம் செய்த ராமனுடைய கீர்த்திகளையும் பாடி, ஊரிலுள்ள அனைத்துப் பெண்களும் நோன்பு நூற்க குறித்த இடத்தில் வந்து சேர்ந்துவிட்டனர்.
(சுக்கிரன்) வெள்ளிக் கிரகம் உச்சிக்கு வந்து, வியாழன் (பிரஹஸ்பதி) மறைந்துவிட்டது.

மேலும் காலைப்பறவைகள் ஒலித்துப் பறந்து செல்லும் சப்தம் உனக்கு காதில் கேட்கவில்லையா? சிவந்த தாமரைப் போன்ற கண்களையுடையவளே! இந்நன்னாளில் தூங்குவதுபோல கண்களை மூடிக்கொண்டு பாவனை செய்வதை விட்டுவிட்டு, எங்களுடன் குளிர்ந்த நீரில் அமிழ்ந்து முழுகாமல், படுக்கையில் உறங்குகிறாயே பாவைப்பெண்ணே! எழுந்து வா."
----------------------------

இன்னொரு பாசுரத்தில் கடல் நீர் ஆவியாகி மேலெழும்பி மேகத்தில் நீர்த்திவலையாகத் தஞ்சமடைந்து பின் குளிர் மழையாக பூமிக்கு வீழ்வதை ஆண்டாள் அழகுறப் பாடியிருப்பாள்.

அக்காலப் பெண்களின் தீந்தமிழ் புலமையைப் பற்றி நாம் அறிவோம்.

ஆனால் கல்வியறிவு என்பது நிறுவனப்படுத்தப்படாத அந்தக் காலகட்டத்தில் பதின்ம வயதில் ஆண்டாளுக்கிருந்த அத்தகைய அறிவும் உலகளாவிய பார்வையும் அக்காலத்தில் தமிழ்ப் பெண்டிர் பெற்றிருந்த பேரறிவைப் பறைசாற்றுகிறது அல்லவா?

Saturday, 23 December 2017

KB

இது ஒரு
செல்லுலாய்ட் சிற்பியின்
அமரம்.

எவர் நடித்தாலும்
அவர் இயக்கியதால்
அவர் படமாயின.

புரட்சி என்பதை
பட்டங்களில்
கொள்ளாமல்
கருத்திலும்
கொண்டவர்.

தன்னை
யாருக்காகவும்
இழக்காத
நிஜ
சுயமரியாதையர்.

துணிவுக்கு
துணை நின்றவர்.

பெண்ணியத்தின்
ஆண் காவலர்.

புதுமைக்கு
முதல் கட்டியம்
அவருடயது.

எல்லார் இறப்பும்
இழப்பன்று.

அனுதாபம்
குடும்பத்திற்கு.

ஆறுதல்
நமக்கு.

இழப்பு
சினிமாவுக்கு.

Sunday, 26 November 2017

அகல்

எரிகின்ற விளக்காய்
வாழ்க்கை.
தீபம் போல் நான்
ஒளியை உமிழ்ந்தாலும்
உன் அன்பென்னும்
நெய் இல்லாமல்
திரிகளில் மெல்லக்
கவிழ்கிறது
இருள்...

Tuesday, 10 October 2017

பாட்டியின் திவசம்

மடியாக
மனையில் அமர்ந்து,
அவசரமாக
எல்லாம் முடித்து,
ஆயாசமாக
கிளம்புகிற சமயம்.

செல்போனில்
ஒரு காதோடு
தன் மனசையும்
வைத்திருந்த
அந்த வாத்தியார்
'பெருமாள  நினைச்சுக்கோ,
பாட்டிய நினைச்சுக்கோ'
என்றபடி எழ,
அறையில்
சுழன்ற புகையில்
பாட்டியின் முகம்
மெல்லக் கரைந்து
நழுவிப் போனது.

எப்போதோ
நான் எழுதிய கவிதை
ஒன்று
என் நினைவை இடற,
கழிவிரக்கத்தின்
உந்துதலில் வழிந்த
கண்ணீரை
சுண்டு விரலால்
துடைக்கும் போது
யாரோ சொன்னார்:
' புகை 
ஜாஸ்தியோன்னோ,
கண்ணாடியை
ஏன் கழட்டினீர்?'

இனி
இதெல்லாம்
நடப்பதற்கு
அடுத்த வருடம்வரை
காத்திருக்க வேண்டும்.

திதி

உயிரோடு இருந்தேன். 
கேட்க நாதியில்லை. 
செத்துத் தொலைந்தேன். 
இந்த ஜடத்திற்கு 
பிடித்ததெல்லாம் படையலானது.

சுடுகாட்டு மண்ணில் 
என் சாம்பலின் 
சூடு ஆறும் முன்பே 
என் மனைவி 
யாரிடம் இருக்கலாம் என்றொரு 
பாகப்பிரிவினை நடந்தது.

பேத்தி வாங்கிய 
பரிசுக் கோப்பையை 
அடுக்கிவைக்க இடமில்லாததால்
என் மூக்குக் கண்ணாடி அலமாரியிலிருந்து 
முச்சந்திக்கு போனது.

உறைந்த சிரிப்புடன் 
நான் இருக்கும்
புகைப் படத்தில் இருந்த
அந்தச் சந்தன மாலையும் பின்னொரு நாளில்
என் மனைவியின்
படத்துக்கு இடம் மாறியது.

ஒரு சுபயோக
சுப தினத்தில்
கீழே விழுந்து
உடைந்து போன
அந்தப் புகைப்படமும்
பரணுக்கு
வழியனுப்பப்பட்டது.

சிம்லா-மணாலி
குடும்பச் சுற்றுலா
குறுக்கிட்டதால்
என் வருஷ திவசமும்
தேதி குறிப்பிடாமல்
ஒத்தி வைக்கப்பட்டது.

அமாவாசையன்று
பக்கத்து வீட்டு ராவுத்தர் பெண்டாட்டி
மிச்சமென்று விட்டெறிந்த
சிக்கன் பிரியாணியைக் 
கொத்தித் தின்றுவிட்டு 
இவ்வீட்டு திதிக்கான 
சோற்று
உருண்டையைப் 
பதம் பார்க்கக் காத்திருக்கும் 
அந்தக்
காக்கை அறியுமோ 
இக்கதையை?

Sunday, 8 October 2017

தமிழன்னைக்கு....

நான் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே பதிவிடுவற்கு முன் அதிலிருந்த சில பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்தேன். அப்போது என் மகளும் உடனிருந்தார்.

'வாழ்த்துகள்' என்பது சரியா? அல்லது 'வாழ்த்துக்களா?' என்று கேட்டார்.

வாழ்த்துக்கு பன்மையில் வலி மிகாது, வாழ்த்துகள் என்பதே சரி என்ற பதில் எனக்கு முன்பே தெரிந்திருந்தது என்பதால் சொன்னேன்.

'ஒரு' என்ற சொல் எப்போது வரும்?
ஏன் அந்த இடத்தில் 'ஓர்' என்ற சொல்லைப் பயன்படுத்தினீர்கள்? என்ற கேள்விகளைக் கேட்டார்.

சொன்னேன்.

உயிர் எழுத்துக்களைக் கொண்டு தொடங்கும் சொற்களுக்கு முன்னால்
"ஓர்" மட்டுமே வரும். உயிர்மெய் எழுத்துக்களைக் கொண்டு தொடங்கும் சொற்களுக்கு முன்னால் மட்டுமே 'ஒரு' பயன்படுத்த வேண்டும்.

ஆங்கிலத்தில் "an" என்ற 'article'  a,e,i,o,u ஆகியவற்றுக்கு முன்னால் மட்டும் வருவது போல என்பது எனக்குத் தெரிந்திருந்ததால் சொன்னேன்.

அடுத்ததாக 'அல்ல' மற்றும் 'அன்று' ஆகிய சொற்கள் எவ்வாறு பயன்
படுத்தப்பட வேண்டும் என்ற ஐயம் எழுந்தது.

சொன்னேன்.

'அன்று' என்பது ஒருமைக்கும் 'அல்ல' என்பது பன்மைக்கும் பொருந்தும் என்பது எனக்குத் தெரிந்திருந்த காரணத்தினால் சொன்னேன்.

நண்பர் ஒருவரின் பதிவொன்றைப் படித்தபோது அதில் ஒர் இடத்தில் ஏற்பட்டிருந்த சந்திப் பிழையைச் சொல்லி தமிழில் தற்காலத்தில் எல்லோராலும் பரவலாகச் செய்யப்படும் பிழையென அதைச் சொன்னேன்.

'அதை எங்ஙனம் களைவது?' என்ற அவரின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. 

இன்னும் தமிழில் உள்ள பல ஐயங்களுக்கு என்னிடம் பதில் இல்லை. அப்படியென்றால் நான் எழுதும் தமிழ் பிழையானதா என்றால் ஆம் என்பதே உண்மை.

வெட்கத்துக்குரிய உண்மை.

பல ஐயங்களுக்கு பதில் தெரியாமலேயே நாம் தமிழைப் பேசியும் எழுதியும் வருவது முறையா?

'வலி மிகும்' இடங்களும் 'வலி மிகா' இடங்களும் "கள்வரே கள்வரே"  திரையிசைப் பாடலில் வைரமுத்து எழுதிய பிறகு தான் பலருக்கு தெரிந்திருக்கிறது.

மிக்க குற்றவுணர்வுடன் எங்கள் இல்லத்தில் உள்ள குறு நூலகத்தை நாடினேன். தேடினேன்.

இந்த இரண்டு புத்தகங்களும் கிடைத்தன. இத்துணை நாட்களும் அந்தப் புத்தகங்களைத் தொடக்கூட இல்லையே என வருந்தினேன்.

"தமிழ் இலக்கணம்- ஒரு எளிய அறிமுகம்" என்ற புத்தகம் திரு. கோ. குமரன் அவர்கள் எழுதியது.
சந்தியா பதிப்பகத்தின் வெளியீடு.

தமிழ் இலக்கணத்தை எளிமைப் படுத்தி அந்தச் சிறிய நூலை  எழுதியிருக்கிறார்.

'ஜாலியா தமிழ் இலக்கணம்' என்ற கிழக்கு பதிப்பகத்தின் புத்தகம் இலவசக் கொத்தனாரால் எழுதப்பட்டது. நூலின் பெயருக்கேற்ப 'தங்கிலீஷ்' கலந்த நடையில் உரையாடலாக எழுதப்பட்ட இப்புத்தகம்  இளைஞர்களுக்கு ஏற்றபடி உள்ளது. அங்கங்கே குறும்பு கூத்தாடும் நடை அதன் வாசிப்பை சுவாரசியமானதாக ஆக்கியுள்ளது.

இரண்டு புத்தகங்களும் அளவில் சிறியவை. படைப்பில் எளியவை. படிக்கச் சிறந்தவை.

குற்றியலுகரம், சார்பெழுத்து, மூவகைப் போலிகள், வேற்றுமை உருபுகள், ஆய்தக் குறுக்கம், மாத்திரை, யாப்பு இலக்கணம், வஞ்சப் புகழ்ச்சி அணி, ஆசிரியப்பா, ஆகுபெயர், வினைத்தொகை, சந்திப்பிழை, மரபுத் தொடர்கள், வியங்கோள் வினைமுற்று, இரட்டைக்கிளவி என நாம் பள்ளியில் கற்றதெல்லாம் மனத்திரையில் ஓடுவது உத்தரவாதம்.

ஒன்று சத்தியம், தமிழின் பெருமை அதைப் பிழைகளற்றுப் பேசுவதிலும் எழுதுவதிலும் தான் இருக்கிறது.
வெறும் வாய்ச்சொல்லில் வீரனாக இருப்பதில் இல்லை.

இல்லையென்றால் 'வாத்தியார்' சுஜாதா சொன்னதைப் போல ' மிஸ் தமிழ்த் தாயே நமஸ்காரம்' தான் மிஞ்சும்.

தமிழன்னைக்கு வணக்கம்!

Thursday, 14 September 2017

வில்லிலிருந்து ....

கருப்புக்கு ஆசைப்பட்டாய்.
பின்னர் காக்கியைத் தேர்ந்தாய்.
தற்போது வெள்ளைக்கு
மாறிவிட்டாய்.

நீ உடன் இல்லாத
இல்லத்தில் நான்
சில நேரம் அலையாகவும்
சில நேரம் கரையாகவும்
மாறிக் கொள்கிறேன்...

தொலைபேசித் தொலைவே
என்றாலும்
நீ
எதிரில் இல்லாத போது
காலத்தை என் மனது
சபிக்கிறது.

சல்லடையைப் போல
பிரிவைத் தள்ளிவிட்டு
புன்னகையைப்
புறங்காட்டி
நான் நடக்கிறேன்.

உன் அம்மாவோ
ஒரு முறம் போல
பெருமிதத்தை
உள் ஒளித்து
கவலையை
மறைக்கத் தெரியாமல்
தவிக்கிறாள்...

அம்புகளைப் போலவாம்
மகள்கள்.
வில்லுக்கு
அவை சொந்தமல்லவாம்...

வேங்குழலிருந்து பிறக்கும் நாதம் யாருக்குச் சொந்தம்?

ஒருவழியாக
ஒரு
முடிவெடுத்துவிட்டேன்..

கெஞ்சியோ, கொஞ்சியோ,
எப்படியோ,
வருங்காலத்தில்
வீட்டோடு மாமனாராக
எனக்கு முழுச்
சம்மதம்.

Saturday, 29 July 2017

தமிழ் வாழ்க...

'மம்மி..............' என்றழைத்து
குழந்தை
கழுத்தைக் கட்டிக்கொண்ட
வேளையில்
'அம்மா..................'
என்றழைத்தது ஒரு குரல்.
வாசலில்
பிச்சை.
பக்கத்து வீட்டில்
மாடு.

Monday, 3 July 2017

அபிமானம்

ஞாயிறு அதிகாலை தனித்து இன்னிசை  மழையில் நனைவது என் நீண்ட நாள் வழக்கம்.  அந்த தருணத்தில் அந்தப் பாடல் அல்லது இசையோடு தொடர்பான நிகழ்வுகள் முகிழ்த்தால் சுகமாக அசை போடுவதும் நடக்கும்.

இன்று இந்த fusion ரகப் பாடலை ரசித்துக் கொண்டிருந்த போது என் நினைவில் வந்தவர் என் தாய்வழிப்பாட்டியான அமரர் செங்கமலம்.

படித்தது ஆறாவது வரைதான். பால்ய விவாகம். சுதந்திரம் தரப்படாத சூழ்நிலை. நாற்பதில் விதவை.

அவரது பன்கலைத் திறமைகள் அபாரமானவை. நல்லதையும் அன்பையும் தவிர வேறு ஏதும் அறியாதவர். கவிஞர். ராகமும் தாளமும் இயைந்து அவர் சொந்த மாக இயற்றிய பக்திக் கீர்த்தனைகள் எண்ணற்றவை. சிறுகதைகள் எழுதினார். கர்நாடக இசையில் விற்பன்னர். கோலம் வரையும் கலையில் ஜாம்பவான்.

குழந்தைகளுக்கு அவரைப் போலச் சுவையாகக் கதைகள் சொல்வதில் நிகரற்றவர். சிந்தனைகளில் பத்தாம்பசலித்தனத்தை உதறியவர்.

ஒரு நாள். ஒரு சத்திய நாரயணா பூஜையன்று என்று நினைவு. இந்தப் பாடலைப் பாடினார். குடத்திலிட்ட விளக்கைப்போல. அதிராத மெல்லிய இனிமையான குரலில்.

இப் பாடல் மருகேலரா ஓ ராகவா எனத் துவங்கும் தியாகய்யரின் கீர்த்தனை. என் தாத்தா பெயர் ராகவன் ஆயிற்றே. கணவனின் பெயரை மனைவி உச்சரிக்கத் தயங்கும் காலம்.

மருகேலரா ஓ ராமா என்று பாடினார்.

ஏன் பாட்டி, மாற்றிப் பாடினாய் என்று கேட்டேன்.

சற்றே வெட்கம் கலந்த மில்லி மீட்டரில் ஒரு மெல்லிய புன்னகையைப் பதிலாய்த் தந்தார். என் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார்.

'அபிமானத்தை எப்படியும் காட்டலாம் சுந்தர், உனக்கு பின்னாடி புரியும்' என்றார்.

போன வாரம் தொடர்யிரத நிலையத்தில் ஒரு ஜோடியைப் பார்த்தேன். அன்னியோன்னியமான ஜோடி. கணவனை அவர் வார்த்தைக்கு வார்த்தை 'டா' போட்டு அவர் பேசியதே ஒரு தனி அழகு.

என் பாட்டி 1975ல் சென்னதற்கான அர்த்தம் எனக்கு அப்போது தான் புரிந்தது.

அன்பிற்கும் உண்டோ.......?

Wednesday, 7 June 2017

மழை

மழைத்தாரைகள்
பூமியை நனைக்கும்
தருணத்தில்
சட்டென
உலகம் அழகாகும்.

மேகத்தின் மோகம்
நிமிடங்களில்
தணிந்து போகும்.

குளித்துக் களித்து
மரங்கள் எல்லாம்
தலை துவட்டும்.

பறவைகளோ
சிறகு நனைந்து
உடல் சிலிர்த்து
கிளை அடையும்.

வானமங்கை
வெண்மேக உடை
களைந்து
கார்வண்ணப்
பட்டு அணிவாள்.

கதிரவன் சற்றே
இளைப்பாற
புவியன்னை அகம்
குளிர்வாள்.

தரையெல்லாம்
நீர்நனைத்து
மண்வாசம்
உயிர்கிளரும்.

பூங்கொடிகள் புதிதாய்
தலை சிலுப்பிக்
கூத்தாடும்.

குளிர்வது பூமி
மட்டுமா?

இனிது இனிது
மழை இனிது.

Sunday, 30 April 2017

பாசுரம் பரவசம்- 9

ல்லாண்டு பல்லாண்டு...
---------------
ஸ்ரீனிவாச ராகவன்

சில மாதங்களுக்கு முன்பு
ஷீரடி நாதன் கோவில் வளாகத்தில் மாலை நேர ஆரத்திக்காக வரிசையில் அமர்ந்திருந்தேன். என்னோடு அவன் அருளை நாடி வந்திருந்தோரும் அந்தப் பரவசத் தருணத்திற்காக பாபாவின் நாமாவளியை ஜபித்தபடி அமைதியாகக் காத்திருந்தோம்.

அருகே ஒரு தமிழ்க் குடும்பம் இன்பமே சூழ்ந்தவராக தமக்குள் பேசிக் கொண்டு இருந்தனர்.  அவர்களில் ஒருவர் திடீரென ஒரு கேள்வியைக் கேட்டு யோசிக்க வைத்தார். கேட்ட அந்த நொடியில் அவர்களிடையே நிலவியிருந்த கலகலப்பு நழுவிச் சென்று அடர்ந்த அமைதி வேண்டா விருந்தாளியாய் உட்புகுந்தது.

'திடீரென கடவுள் உன் முன் நேரில் தோன்றினால் நீ அவரிடம் என்ன கேட்பாய்?'

இது தான் அவர் கேட்ட அந்தக் கேள்வி.
அக்கேள்வி ஒன்றும் புதியதோ அல்லது கடினமானதோ அல்ல. ஆனாலும் அவர்கள் என்ன சொல்லப்
போகிறார்கள் என்று கேட்கும் ஆவலில் நான் எனது செவிகளை தீட்டிக் கொண்டேன். அவர்கள்
ஆளாளுக்கு ஒவ்வொரு பதில் சொன்னார்கள். எல்லாரும் அவரவர் தேவைகளையும், கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் தொடுத்தபடி இருந்தனர். 'இவ்வளவு சுயநலம் மிக்கவர்களா மனிதர்கள்?" என்று வியந்தபடி நான் அவர்களைக் கவனித்து வந்த போது அவர்களில் ஒருவர் அதே கேள்வியை என்னிடமும் கேட்டார். உண்மையில் என்னிடம் ஏற்கனவே அந்தக் ஒரு பதில் இருந்தது.

'என் மரணம் என்றைக்கு நேர்ந்தாலும் அது இயற்கையானதாகவும் உன் அருளுடனும் நேர வேண்டும் என்று அவனிடம் நான் கேட்பேன்' என்ற என்னை அவர் வெறுப்புடன் பார்த்தார். "ஆண்டவன் கொடுத்த அழகான இந்த வாழ்க்கையைப் பற்றிக் கேட்காமல் அபசகுனம் மாதிரி சாவைப் பற்றி பேசலாமா?" என்று என்னைக் கடிந்தும் கொண்டார். நான் எனக்குள் சிரித்தபடி அமைதியானேன். என் கோரிக்கையும் ஒரு வகையில் சுயநலம் தான். ஆயினும் அந்த ஒரு செயல் அவன் கையில் மட்டும் இருக்கும் போது அதை அவனிடம் தானே கேட்கவேண்டும் என்று நினைத்தபடி தொடர்ந்து அவர்களை கவனிக்கத் தொடங்கினேன்.

அப்போது அந்தக் குடும்பத்தில் இருந்த சுமார் ஆறு அல்லது ஏழு வயதுள்ள ஒரு சிறுமி சட்டென ஒரு பதிலைச் சொன்னாள். அதைக் கேட்டு அப்படியே திகைத்துப் போனது அந்தக் குடும்பம்.
நானும் அவள் சொன்னதைக் கேட்டு அப்படியே உறைந்து போயிருந்தேன்.

உலகமறியாத வயதில் அந்தப் பிஞ்சு சொன்ன பதில் என் சிந்தனையைப் புரட்டி உலுக்கி எடுத்தது.

அப்படி என்னதான் சொல்லிவிட்டாள் அச் சிறுமி?

"நான்  அந்த உம்மாச்சியைப் பார்த்து எல்லாரையும் நல்லா வச்சிண்டிருக்கிற நீ முதல்ல உன்னை நல்லாப் பார்த்துக்கோன்னு சொல்லுவேனே!" என்றாள் அக்குழந்தை.

எப்பேர்ப்பட்ட உயரிய சிந்தனையும் ஆண்டவனிடத்தே அதீத அன்பும்  இருந்திருந்தால் அக்குழந்தை அந்த ஆண்டவனுக்கே 'நல்லா இரு' என்று ஆசி வழங்கும்?

அந்தக் குழந்தைக்கு இருந்த அதே பக்திப் பரவசம் தோய்ந்த மனநிலை பல நூறாண்டுகளுக்கு முன்பு திருவில்லிப் புத்தூரைச் சேர்ந்த விஷ்ணுச் சித்தன் என்பவருக்கும் இருந்தது.

அதனால் தான் பட்டர் பிரானாகப் பாண்டிய அரசனால் பட்டம் சூட்டப்பட்ட அந்த அருளாளரால் பன்னிரு ஆழ்வார்களிலேயே தலையாய
' பெரியாழ்வார்' ஆக முடிந்தது.

அவரை ஏன் ஆழ்வார்களில் முதலிடத்தில் வைத்தார்கள்?

அவர் பனிரெண்டு ஆழ்வார்களில் அனைவருக்கும் மூத்தவரா?

இல்லை.

அவர் இயற்றிய பாசுரங்களின் எண்ணிக்கை மிக அதிகமா?

இல்லை.

தனக்குப் பின்னாள் தன் மகள் கோதை என்ற ஆண்டாளை பெண் ஆழ்வாராக உலகிற்கு தந்ததாலா?

இல்லை.

எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கே தன் மகளை மணமுடித்து  அவனுக்கே மாமனார் ஆனதாலா?

இல்லவே இல்லை.

பின் எதற்காக அவரை பெரியாழ்வார் என்கிறோம்?

மதுரையை ஆண்டு வந்த வல்லபத்தேவன் என்ற மன்னனுக்கு ஒரு ஐயம் ஏற்பட்டது. மறுமைக்கு வேண்டியதை இம்மையில் தேட எது சிறந்த வழி என்ற ஐயம்.

அரசவை சொன்ன ஆலோசனைப்படி ஒரு சத்சங்கத்திற்கு அழைப்பு விடுத்தான். எல்லா இடங்களிலிருந்தும் சமய அறிஞர்கள் ஒன்று கூடி ஆராய்ந்து, விவாதித்து  முடிக்கும்போது விஷ்ணுச்சித்தன் உரைத்த மால்நெறி தத்துவமே வென்றது.

திருமால் ஒருவனே உய்ய ஒரே வழி என்ற அவரது கருத்துக்கு இசைந்த பொற்கிழி கட்டிய கம்பம் தானே வளைந்து கொடுக்க விவாதத்தில் அவர் வென்றார்.

மன்னனின் ஐயம் தீர்ந்ததால் அவன் அவருக்கு பட்டர் பிரான் என்ற பட்டம் சூட்டி, பரிசளித்து, அவரை யானைமேல் அமர்த்தி நகர்வலம் வரச் செய்த போது திடீரென அந்த அற்புதம் நிகழ்ந்தது.

பக்தனின் மேன்மையில் மகிழ்ந்த பரந்தாமன் கருடவாகனத்தில் தாயாரோடு அப்போது வானில் நேரில் அவருக்கு காட்சி தந்தான்.

இந்நிகழ்வை நாம் சற்று கவனமாக அவதானிக்க வேண்டும்.

சற்று நேரம் முன்பு ஷீரடியில் சிறுமி ஒருத்தி சொன்ன வார்த்தைகள் தங்கள் நினைவிற்கு வருகிறதா?

அதே மனநிலையில் தான் பட்டர் பிரான் அன்று இருந்தார்.

மாலனைப் பார்த்தவுடன் அவர் என்ன கேட்டிருப்பார் என்று நினைக்கிறீர்கள்?

தனக்கு நன்மைகள் எல்லாம் வேண்டினாரா?

தமக்கு இருந்த அல்லல்களை தீர்க்கும் படி கேட்டாரா?

தனக்கு இம்மையில் வீடுபேறு வேண்டினாரா?

கிடையாது.

வேறு என்ன தான் கேட்டார்?

நாரணனிடம் எதையும் தனக்காக அவர் கேட்கவில்லை.

மாறாக அவர் அவனியைக் காக்கும் அந்தப் பெருமாள் நன்றாக இருக்க
வேண்டும் என்று மட்டுமே வேண்டினார்.

அதற்காக 'பல்லாண்டு' என்ற இலக்கிய வகைமையைச்( genre) சேர்ந்த காப்பு செய்யும் பாசுரங்களையும் அவர் அப்போது பரவசமாகப் பாடினார்.

'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா, உன் சேவடி செவ்வித் திருக்காப்பு' என்று தொடங்கி மொத்தம் பனிரெண்டு பாசுரங்களைப் பாடி கடவுளுக்கே நன்மை வேண்டிய பெருந்தகை அவர்.

வைணவ சம்பிரதாயத்தில் மங்களாசாசனம் என்பது சிறப்பான ஒரு அம்சம்.

அது என்ன மங்களாசாசனம்?
மங்களம் என்றால் நன்மை.
ஆசாசனம் என்பது வேண்டுதல்.
ஆக நன்மைகளை வேண்டிப் பாடுவதே மங்களாசாசனம் எனப்படும்.

ஆண்டவனுக்கே நன்மை வேண்டி பக்தன் ஒருவன் மங்களாசாசனம் செய்விப்பது என்பது வேறு யாரும் கனவிலும் நினைத்திராத கைங்கரியம் அல்லவா!

அதனால் விளைந்த சிறப்புக்கள் இரண்டு.

வரிசையில் எட்டாவது  ஆழ்வாரான
பட்டர் பிரான் என்ற விஷ்ணுச்சித்தன்
"பெரியாழ்வார்" எனச் அழைக்கப்பட்டது அதனால் தான் என்பது முதலாவது சிறப்பு.

மொத்தம் பனிரெண்டு பாசுரங்கள் மட்டுமே கொண்ட அந்தத் 'திருப்பல்லாண்டுப் பாசுரங்கள்' தான் பின்னாளில்
நாதமுனியால் ஆழ்வார்கள் உருகிப் பாடிய பாடல்கள் 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்' என்ற தமிழ் மறையாகத் தொகுக்கப்பட்ட போது எல்லாவற்றுக்கும் மேலாக முதல் பாசுரமாகவும் இடம்பெற்றது.
அது இரண்டாவது சிறப்பு.

திருமாலின் மேல் பெரியாழ்வார் வைத்திருந்த அன்பு அளவு கடந்தது.
ஞானமும் கடந்தது. அந்நிலையில் அவருக்கு தான் ஒரு பக்தன் மட்டுமே என்பதும் தான் தரிசிப்பது தன்னை மட்டுமல்ல, அகில உலகத்தையே ரட்சிக்கும் பரந்தாமன் என்பதும் மறந்து போனது. அது  ப்ரக்ஞை அற்ற ஒரு தவ நிலை.

'மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள் தங்கள் ஆர்வத்தளவு தானன்றிப் - பொங்கும் பரிவாலே வில்லிப் புத்தூர்ப் பட்டர் பிரான் பெற்றான் பெரியாழ்வார் என்னும் பெயர் ' என்று மணவாள மாமுனிகள் சும்மாவா சொன்னார்!