Sunday, 28 January 2018

அமானிடன்

என்னைத்தவிர யாருமற்ற
அந்த அறையில் என்னுடன்
அதுவும் இருக்கிறது.

காற்று வீசாமல்
ஊதுபத்திப் புகை 
வளைகிறது.

குளிர் இல்லாமல்
சில்லென ஆகிறது
காற்று.

அழைத்தேன்.
கேட்டேன்.
கைகளால் துழாவினேன்.
கத்தியும் பார்த்தேன்.
சலனமில்லை.

புகையாகக் கூட
இல்லாத ஒன்றை
எப்படி 'ஆவி'
என்றழைப்பது?

தான் அங்கே இருக்கிற
ஒன்றைத் தவிர
வேறு எதையும்
அது
செய்யவில்லை.

செத்துப் போனவனா?
வேற்று கிரகவாசியா?
காட்சிப்பிழையா?
மனப்பிறழ்வா?
வினாக்களால்
நிரம்பி வழிகிறது
என் அக அறை.

மையிருளில்
ஒற்றை மெழுகுவர்த்தி
ஒளிகாட்ட
ஒய்ஜா போர்டில்
'நாங்கள் மனிதர்கள்,
நீங்கள் யார்' என்று
எழுதிக் கேட்டேன்.

விரல்களின் வழியே 
ஏதோ ஒன்று
சில்லென்று பரவியது.

செல்லாது போன
அந்தச் செப்புக் காசு
இழுத்துக் கொண்டு போன
எழுத்துக்களை எல்லாம்
சேர்த்தும் கோர்த்தும்
வாசித்த போது
அது
'த்தூ,
நீங்கள் எல்லாம்
வெறும் பிணங்கள்' என்றது.

No comments:

Post a Comment