அந்த
மருத்துவமனையில்
ரத்த தானப் பிரிவில்
நான்
கடவுளைச் சந்தித்தேன்.
தன்னைக் காப்பாற்றியதற்காக
அந்தக் கடவுளிடம்
ஒரு பெண்
நன்றி சொல்லிக்
கொண்டிருந்தாள்.
'நீங்கள் கடவுளா?'
என்ற கேள்வியோடு
எங்களின் உரையாடல்
துவங்கியது.
'அப்படித்தான் என்னை
எல்லாரும் சொல்கிறார்கள்'
என்றார் அவர்.
'உங்கள் பெயர்?'
என்ற கேள்விக்கு
அவருடமிருந்து
கடைசி வரை
பதில் இல்லை.
'ராமனா? ஏசுவா?
அல்லாவா? இல்லை,
புத்தனா?'
என்றேன்.
'அதெல்லாம்
நீங்கள் எனக்கு
வைத்த பெயர்கள்'
என்றார் கடவுள்.
'நீங்கள் எந்த மதம்?'
என்று கேட்டேன்.
'அப்படி எதுவும்
எனக்குக் கிடையாது'
என்றார் கடவுள்.
'நான் சொன்ன
கடவுள்களை நீங்கள்
சந்தித்ததுண்டா?'
என்று கேட்டேன்.
'அப்படி யாரையும்
நான் பார்த்ததில்லை'
என்றார் கடவுள்.
'நீங்கள் ஒருவர்
இருப்பது போலவே
தோன்றவில்லை'
என்று கேட்டேன்.
'நீ நீயாக
இருந்தால்
நான்
நானாக இருப்பேன்'
என்றார் அவர்.
'நீங்கள் இங்கே
இருந்தால் நன்றாக
இருக்குமே' என்றேன்.
'என்னிடமிருந்து
உங்களை எதுவோ
தடுத்தால்
அது என்னுடைய
தவறில்லை'
என்றார் கடவுள்.
'நீங்கள் தானே
இத்தனை மோசமான
குணங்களோடு
மனிதர்களைப் படைத்தீர்கள்?'
என்று கொஞ்சம்
கோபத்தோடு கேட்டேன்.
'நானா?' என்று கேட்டவர்
சிரித்தபடி தொடர்ந்தார்.
'நீங்கள் அல்லவா
என்னைப் படைத்தீர்கள்?'
ரத்த தானம் முடிந்து
திரும்பிப் பார்த்தேன்.
கடவுளை அங்கே
காணவில்லை.
எங்கேயேனும்
கடந்து உள் சென்று
இருப்பார்
என்று நினைத்தபடி
வீடு வந்து விட்டேன்.
No comments:
Post a Comment