அன்றைய சந்திப்பின்
அத்தனை நிமிடங்களையும்
வினாக்களே
விழுங்கிக் கொண்டன.
கேட்டார்கள்.
கேட்டுக்கொண்டார்கள்.
----
'எப்போதெல்லாம்
என் நினைப்பு உன்னை விழுங்கும்?'
'வேறு எதுவாகவும் இல்லாமல் நானாகவே நான் இருக்கும்
பொழுதெல்லாம்'
----
'உனக்கு எப்போது என் ஞாபகம்?'
'என் இமைகள் சார்த்திய போதெல்லாம்'
-----
ஒரு மெளன இடைவேளையில்
விரல்கள்
ஐந்தோடு பத்தாயின.
----
'இந்த ஸ்பரிசம்
எதைக் காட்டுகிறது?
'காமம் துறந்த காதல்
சாத்தியம் என்பதை'
----
சொல்லி முடிக்கவில்லை, விரல்களில்
உதடுகள் பதிந்தன.
----
'இது எதைக் குறிக்கிறது?'
'முத்தம் காமத்தின்
நுழைவாயில் என்பதை'
-----
விடுவித்துக் கொண்ட
கரங்களில்
இதழ்களின் ஈரத்தோடு
கண்ணீரின் ஈரமும் சேர்ந்து கொண்டது.
----
'இத்தனைக்குப் பிறகும் நீ ஏன் என்னிடம் இவ்வளவு பிரியம் காட்டுகிறாய்?'
'ஏன் என்றால் நான் உன்னை இன்றும் காதலிக்கிறேன்.'
'அது தான் கை கூடவில்லையே?'
'திருமணத்தில் முடியாது போயினும் துணையை வெறுக்காத அன்பு என்னுடையது."
-----
'என்ன இருந்தாலும் நான் உனக்கு
ஒரு 'முன்னாள்' தானே?
'இல்லை. இல்லை.
காதலில் ஏது மாஜி?'
-----
'அப்படியானால்
நான் உனக்கு யார்?'
'நீ என் இதயத்தின் இசை'.
-----
'உனக்கு நான் யார்?'
'நீ என் கருவில் மரித்த சிசு'.
------
'அடுத்து என்ன?'
என்ற கேள்விக்கு
இருவரிடமும் பதில் இல்லை.
-----
அதற்குப் பின்பும்
உயிர் மரித்து
உடல் வாழ்கிறது
அவர்களிடம்.
-----
No comments:
Post a Comment