Friday, 4 May 2018

முன்னாள்

அன்றைய சந்திப்பின்
அத்தனை நிமிடங்களையும்
வினாக்களே
விழுங்கிக் கொண்டன.

கேட்டார்கள்.
கேட்டுக்கொண்டார்கள்.

----

'எப்போதெல்லாம்
என் நினைப்பு உன்னை விழுங்கும்?'

'வேறு எதுவாகவும் இல்லாமல் நானாகவே நான் இருக்கும்
பொழுதெல்லாம்'

----

'உனக்கு எப்போது என் ஞாபகம்?'

'என் இமைகள் சார்த்திய போதெல்லாம்'

-----

ஒரு மெளன இடைவேளையில்
விரல்கள்
ஐந்தோடு பத்தாயின.

----

'இந்த ஸ்பரிசம்
எதைக் காட்டுகிறது?

'காமம் துறந்த காதல்
சாத்தியம் என்பதை'

----

சொல்லி முடிக்கவில்லை,  விரல்களில்
உதடுகள் பதிந்தன.

----

'இது எதைக் குறிக்கிறது?'

'முத்தம் காமத்தின்
நுழைவாயில் என்பதை'

-----

விடுவித்துக் கொண்ட
கரங்களில்
இதழ்களின் ஈரத்தோடு
கண்ணீரின் ஈரமும் சேர்ந்து கொண்டது.

----

'இத்தனைக்குப் பிறகும் நீ ஏன் என்னிடம் இவ்வளவு பிரியம் காட்டுகிறாய்?'

'ஏன் என்றால் நான் உன்னை இன்றும் காதலிக்கிறேன்.'

'அது தான் கை கூடவில்லையே?'

'திருமணத்தில் முடியாது போயினும் துணையை வெறுக்காத அன்பு என்னுடையது."

-----

'என்ன இருந்தாலும் நான் உனக்கு
ஒரு 'முன்னாள்' தானே?

'இல்லை. இல்லை.
காதலில் ஏது மாஜி?'

-----

'அப்படியானால்
நான் உனக்கு யார்?'

'நீ என் இதயத்தின் இசை'.

-----

'உனக்கு நான் யார்?'

'நீ என் கருவில் மரித்த சிசு'.

------

'அடுத்து என்ன?'
என்ற கேள்விக்கு
இருவரிடமும் பதில் இல்லை.

-----

அதற்குப் பின்பும்
உயிர் மரித்து
உடல் வாழ்கிறது
அவர்களிடம்.

-----

No comments:

Post a Comment