அடுக்ககத்தின்
பொதுவிடத்தில்
அந்தக் குழந்தைகள்
விளையாடினர்.
'இன்னிக்கு என்ன விளையாட்டு?'
என்ற கேள்வியில்
விளையாட்டு களை கட்டியது.
'உம்மாச்சி விளையாட்டு' என்று
சொன்ன ஒரு குழந்தைக்கு
உலகில் மொத்தம்
எத்தனை கடவுள்கள்
என்பது கூடத் தெரியாது.
'நான் ஜீசஸ்' என்றது
ஒன்று.
'நான் அல்லா சாமி'
என்றது மற்றொன்று.
'அப்ப நான்?'
என்று கேட்ட குழந்தை
முருகன் ஆனது.
சிரித்துக் கொண்டும்,
சண்டையிட்டுக் கொண்டும்,
தழுவிக் கொண்டும்,
களித்துக் கிடந்த அவர்களை
'நேரமாயிற்று, வா' என்று சொல்லி அவரவர்கள் வீட்டிலிருந்து
யார் யாரோ
கூட்டிச்செல்ல வந்தார்கள்.
அங்கிருந்து
தங்களது வீட்டிற்கு
கிளம்பியபோது
அந்தக் குழந்தைகள்
'ரிச்சர்ட்' ஆகவும்
'பல்கிஸ்' ஆகவும்
'அனிருத்' ஆகவும்
அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
No comments:
Post a Comment