Sunday, 14 October 2018

தோணியின் பயணம்


அரங்கில் பார்த்தேன்.
உறைந்து போனேன்.
உள்ளுக்குள்.

சலனமற்ற
ஒரு நதியைப் போல
'96
சுழித்துக் கொண்டு
போகிறது.

அமைதியாக,
ஆரவாரம் இல்லாது,
மெளனமாய்,
இயற்கையே
துணையாய்.

எனது மனமும்
அதன் கூடவே
வழுக்கிச் சென்றது,
படகில்,
கனமாக.

சந்தித்த
அத்தனை மலர்களின்
சுகந்தத்தையும்,
மண்ணின்
வாசனையையும்,
மழையின்
ஈரத்தையும்
தன்மீது சுமந்து
கொண்டு
நகர்ந்து சென்ற
அந்த நதி
ஓரிடத்தில் என்னைக்
கரை சேர்த்தது.

கரையில் என்னை
இறக்கி விட்டு நதியில்
பயணத்தைத்
தன் போக்கில்
அந்தப் படகு
தொடர்ந்தது.

படகைப் போலவே
திரையில்
அவனை விட்டு
அவள் விடை
பெற்றிருந்தாள்.

கண்ணை விட்டுப்
புள்ளியாக
திரையிலிருந்து
அந்தக் காட்சிகள்
மறைந்த பிறகு
நான்
மனம் விழித்தேன்.

எனக்குள்
அந்த ராம்-ஐ
அழுத்தமாக
உணர்ந்தேன்.
அந்த ஜானுவைத்
தொழுதேன்.

இந்நேரம்
அந்தப் படகுக்குச்
சுமை கொஞ்சம்
குறைந்திருக்கும்.

இனி மேல்
அந்த நதிக்கு
அவன்  ஒரு சுமையே
இல்லை.

ஆனால் என்ன,
வீடு திரும்பிய
அவன் நெஞ்சில்
ஒட்டு மொத்த
நதியின் பிரவாகமும்,
பயணித்து வந்த
அந்தப் படகின்
பாரமும் முழுதும்
புகுந்து
கொண்டிருக்கும்.

No comments:

Post a Comment