Friday, 30 November 2018

பேசு பொருள்

உயிரற்ற பொருட்களோடு
நீங்கள் என்றாவது
பேசியதுண்டா?

நான் உண்டு.

புகைப்படங்களும்,
திருமண அழைப்புகளும்,
மணல்வெளியும்,
கோப்பைகளும்,
மோதிரங்களும்,
ஆல்பங்களும்,
தாலியும்,
எக்ஸ்-ரேயும்,
லாடங்களும்
பேசுவதை விடவா
ஒரு மனிதன் பெரிதாகப்
பேசிவிட முடியும்?

ஆனந்தம்,த்ருப்தி,
வலி, பசி, 
தோல்வி, தனிமை,
காதல், நட்பு,
கண்ணீர், வெறுமை
என எல்லாமே
பொங்கிப் ப்ரவாகம் எடுக்கும்
அந்த ஜடப்பொருள்களில்
உயிர் இல்லை;
ஆயின்,
உயிர்ப்பு உண்டு.

இப்படியாக
எல்லா ஜடங்களோடும்
எனக்கும்
பேசுபொருள் உண்டு.

ஆனால்
நான் செய்வதையெல்லாம்
தானும் செய்து
கண்ணாடியில் விழும்
அந்தப் பிம்பம் மட்டும்
ஏன் என்னோடு
எதுவும் பேச மறுக்கிறது?

Friday, 23 November 2018

சுவாசம்

அவள் சுவாசம்
என் இதயம் துளைத்து
மூங்கில் விடு தூதானது.

அவள் வாசம்
என் நாசியில் நுழைந்து
உள்ளுக்குள் கள்வெறி
சூல் கொண்டது.

அவள் ஸ்பரிசம்
என் உடலை
எளிதிற் கடத்தியாக்கி
மெய் சுட்டது.

அவள் மெளனம்
என் மனதில்
வேங்குழலாய்
மொழி பெயர்ந்தது.

அவள் நினைவு மட்டும்
என் உயிர் சமைக்க
விறகானது.

சொல்லாமல்
கொள்ளாமல்
என் மூச்சு
வெறும் காற்றாகிவிடும்
அந்த நாளில்
இதயத் துளைகளின் வழி
வெளியேறும்
என் சுவாசம்
அவள் பேரைத் தவிர
வேறு எதை
முனகிவிடப் போகிறது?