உயிரற்ற பொருட்களோடு
நீங்கள் என்றாவது
பேசியதுண்டா?
நான் உண்டு.
புகைப்படங்களும்,
திருமண அழைப்புகளும்,
மணல்வெளியும்,
கோப்பைகளும்,
மோதிரங்களும்,
ஆல்பங்களும்,
தாலியும்,
எக்ஸ்-ரேயும்,
லாடங்களும்
பேசுவதை விடவா
ஒரு மனிதன் பெரிதாகப்
பேசிவிட முடியும்?
ஆனந்தம்,த்ருப்தி,
வலி, பசி,
தோல்வி, தனிமை,
காதல், நட்பு,
கண்ணீர், வெறுமை
என எல்லாமே
பொங்கிப் ப்ரவாகம் எடுக்கும்
அந்த ஜடப்பொருள்களில்
உயிர் இல்லை;
ஆயின்,
உயிர்ப்பு உண்டு.
இப்படியாக
எல்லா ஜடங்களோடும்
எனக்கும்
பேசுபொருள் உண்டு.
ஆனால்
நான் செய்வதையெல்லாம்
தானும் செய்து
கண்ணாடியில் விழும்
அந்தப் பிம்பம் மட்டும்
ஏன் என்னோடு
எதுவும் பேச மறுக்கிறது?
No comments:
Post a Comment