நிலவு அழகா?
வான் அழகா?
தாய் மடியில்
சிசு அழகு.
வான் வெளியில்
மதி அழகு.
மண் மீது விழுந்தாலே
மழை அழகு.
வான் மீது தவழாத
நிலவழகா?
நிலவற்ற வானுக்கு
எழில் இல்லையோ?
புவி நிழலில்
மறைந்துவிடும்
நிலவுக்கு முகம்
இல்லையோ?
நிலா சூடேறும்
வானத்தின் குளிரூட்டி.
வானம் முகிலெனும்
பொதி சுமந்து
மழை ஈனும் தாய்.
சூரியத்தந்தை
உறங்கச் சென்றதும்
நிலா மகள்
ஆட்டம் போடும் மேடை
வானம்.
கடல் கூடி
கர்ப்பம் தரித்த
வான்மேகங்களின்
கண்ணீர்ப்பிரசவம்
மழை.
வான்மகளின்
நெற்றித் திலகம்
நிலா..
No comments:
Post a Comment