Friday, 7 December 2018

இன்றும் நமதே

கடிகாரம் நிறுத்திவிட்டு
காலத்தைத் தேடுகிறோம்.
திரும்ப வரும்போது
நாட்கள் நகர்ந்திருக்கும்.

அலைபேசி ஏந்தியபடி
அன்பர்களைத் தேடுகிறோம்.
அமர்த்தித் திரும்புகையில்
உறவுகளை இழந்திருப்போம்.

ஓசைகளின் இரைச்சலில்
செவிகளை மூடுகிறோம்.
களைத்துக் கழற்றுகையில்
இதயத்துடிப்பு தேய்ந்திருக்கும்.

கதவுகளைச் சார்த்தியபடி
குளிர்காற்றில் அமிழ்கிறோம்.
மின்விசை ஓயும்போது
தென்றல் கடந்திருக்கும்.

எதிர்காலக் கனவுகளில்
நிகழ் திட்டம் தொலைக்கிறோம்.
தற்காலம் கடக்கும்போது
திசைமாறிப் போயிருக்கும்.

கனவுகளைத் துரத்தியபடி
கடமைகளை மறக்கிறோம்.
ஆண்டுகள் கடந்த பின்னர்
பாடங்கள் அணிவகுக்கும்.

கண்முன்னே நடமாடும்
நிகழ்வுகளைத் துரத்திவிட்டு
கனவுகளில் உலாவரும்
மயக்கங்களில் திளைக்காதீர்.

நேற்று என்பது
வெறும் ஒரு நினைவு.
நாளை என்பது
தனிப் பெரும் கனவு.
இன்று என்பது
என்றும் மிக நன்று.

No comments:

Post a Comment