Friday, 12 July 2019

சும்மா இருப்பதில்லை காற்று

அவன்:

தூக்கத்தில் வரும்
கனாக்களிலும்
ஏக்கத்தில் எழும்
வினாக்களிலும்
கடப்பதல்ல என் வாழ்க்கை.

மெளனமாய் ஓடும் ஓடைக்கு
தடையாய் அமையும்
பாறைகளே இசையாவது போல
பாரமான நிகழ்வுகளைச்
சுமந்து வரும்
உன் நினைவுகளால் நான்
நகர்ந்து கொண்டிருக்கிறேன்.

அவள்:

என் கதை வேறு.
வண்டு துளைத்ததால்
புல்லாங்குழலாய் ஆன
ஒரு மூங்கில் போல
உன் சுவாசக்காற்று
என் நாசிகளின்
வழியே உட்புகுந்து
நீ என் இதயத்தில்
காதலாய் இடம் பெயர்ந்தாய்.
நான் அதை
மொழிபெயர்க்க முடியாமல்
அனுநொடியும்
கசிந்து கொண்டிருக்கிறேன்.

அவர்கள்:

மரங்கள்
அசையாது இருந்தாலும்
சும்மா இருப்பதில்லை
அந்தக் காற்று.

No comments:

Post a Comment