மேகங்கள் வசீகரமானவை.
வித விதமான
வண்ணம் தரித்து
நினைத்த போது உருமாறி
உள்ளங்கவர்வதால்.
மேகங்கள் வினோதமானவை.
வெண்மேகமாக
மழை தாராது
கார்மேகமாகிப்
பொழிந்து விடுவதால்.
மேகங்கள் பாவப்பட்டவை.
கர்ணனைப் பெற்ற
குந்தியைப் போல
தான் பிரசவித்த
மழை மீது தனக்கே
உரிமை இல்லாததால்.
மேகங்கள் மோகம் மிக்கவை.
ஆதவனின் ஒளியை
இரவல் பெற்றாவது
வெண் பஞ்சு முகில்கள்
வண்ணத் துகில்கள் ஆவதால்.
ஆயினும்
மேகங்கள் சாபத்திற்கும் உரியவை.
தரிசாக இருந்த மண்மகள்
ஒருபாடாகச் சூல் கொண்டு
பயிராகி நிற்கும் போது
வெள்ளமாக வந்து
அவளின் கர்ப்பத்தைக்
கலைத்து விடுவதால்.
No comments:
Post a Comment