Sunday, 2 September 2018

செம்புலப் பெயனீர்

குறுந்தொகையில் உள்ள நாற்பதாவது பாடல் மிகவும் பிரபலமானது.

கவிஞர்கள், மேடைப் பேச்சாளர்கள், இலக்கியவாதிகள் என்று பரவலாக அதைப் பலரும் மேற்கோள் காட்டி வருகின்றனர்.

இன்றளவும்.

அப்படி என்ன சிறப்பு அப்பாடலில் உள்ளது? என்று கேட்பதற்கு முன் அப்பாடலை ஒரு தடவை படித்து விடுவோம்.

"யாயு ஞாயும் யார் ஆகியரோ, எந்தையு நுந்தையும்
எம்முறைக் கேளிர்
யானு நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம்
தாங்கலந் தனவே"

( குறுந்தொகை 40,
செம்புலப் பெயனீரார்.)

எனது தாய் யார் என்றும், உனது தாய் யார் என்றும் நாம் அறிந்து கொள்ள வில்லை.
உனது தந்தைக்கும் எனது தந்தைக்கும் என்ன உறவு முறை என்பதும் நமக்குத் தெரியாது.
நாம் ஒருவரை ஒருவர் இதற்கு முன்பு அறிந்ததில்லை.
செம்மண் பூமியில் கலந்த மழைத் தண்ணீர் போல அன்புகொண்ட நம் நெஞ்சங்கள் ஒன்றாயின.

இதுவே இப்பாடலின் பொருள்.

ஆனால் ' செம்புலப் பெயனீர்' என்ற வார்த்தைகளின் பொதுவான அர்த்தத்தில் எனக்கு நீண்ட நாளாக ஓர் ஐயம் இருந்து வந்தது.

செம்புலம் என்பது செம்மண் பூமியைக் குறிக்கும் என்று எல்லோராரும் கருதினாலும் என் நண்பர்கள் குழாமிற்கும் எனக்கும் அதில் என்னவோ அவ்வளவு திருப்தியில்லை.

'சரித்தான் போடா, நீ என்ன பெரிய அப்பா டக்கரா?' என்று என்னை நானே திட்டிக் கொண்டு அந்நினைவை விட்டு அகன்றாலும் செம்மண்ணில் மழை நீர் கலந்தால் உருவாகும் செந்நிற நீர் பின்னர் தெளிந்து விடாதா? என்ற வினா தொக்கி நிற்கிறது.

அப்படி என்றால் இந்த ஒப்புமை காதல் நெஞ்சங்களுக்கு எவ்வாறு பொருந்தும்? என்பதும் என்னைக் குடைந்து கொண்டே இருந்தது.

மனதின் ஒரு மூலையில் அந்த சந்தேகத்தை  ஊறப்போட்டு வைத்திருந்தேன்.

சமீபத்தில் திரு. ஜெயமோகன் எழுதிய 'சங்கச் சித்திரங்கள்' என்ற நூலைப் படித்த போது அவர் ஒரு எளிமையான அர்த்தத்தை அந்த வார்த்தைக்கு தந்திருந்தார்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரையும் பிங்கல நிகண்டு- வையும் மேற்கோள் காட்டி "செம்புலம்" என்ற வார்த்தைக்கு 'பாலை நிலம்' என்ற பொருள் உண்டு என்பதால் வறண்டிருக்கும்  பாலை நிலத்தில்  வீழ்ந்த மழை நீரைப் போல காதல் வயப்பட்ட மனங்கள் ஒன்று சேர்ந்துவிடும் என்று தான் செம்புலப் பெயனீரார் அந்தப் பாடலை எழுதியிருக்க வேண்டும் என்கிறார் அவர்.

எனக்கு பாலை நிலம் + மழைநீர்= ஒன்றாதல் என்ற பொருள் காதல் நெஞ்சங்கள் ஒன்றிணைவதற்கு ஏற்ற ஒப்புமையெனத் தோன்றுகிறது.

எது சரி?

செம்புலம் = செம்மண் பூமியா?
அல்லது         பாலை நிலமா?

No comments:

Post a Comment