Friday, 31 August 2018

பாசுரம்-பரவசம் - 13

கடவுளை நம்புபவரும் நம்பாதவரும் கடவுளைப் பற்றி விவாதித்தால் உத்தரவாதமாக இதைக் கேட்கலாம்;-

"நீங்கள் கடவுளைப் பார்த்ததுண்டா?"

"நீ காற்றைப் பார்த்ததுண்டா?"

" அது விஞ்ஞானம்"

" இது மெய்ஞானம்"

"உங்களால் கடவுளை உணர முடியுமா?"

"நீ மின்சாரத்தை எப்படி உணருகிறாயோ, அதே போலத் தான் நான் கடவுளை உணர்கிறேன்".

காலங்காலமாகத் தொடர்ந்து வரும் சர்ச்சை இது.

கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை, ஆனால், கடவுள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தான் சொல்கினேன்! என்று ஒரு மாதிரி 'மய்யமாகச்' சொல்லிவைப்பது சமீபத்திய நியோ-நாத்திகம்.

இந்தக் கேள்விகளை ஆழ்வார்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பது ஒரு சுவாரசியமான தேடல்.

நிறையப் பாசுரங்களில் இத்தேடலுக்கு பதில் தென்படுகிறது.

முதலாழ்வரில் ஒருவரான பேயாழ்வாரைக் கேட்போம்.

"இனி, அவன் மாயன்
என உரைப்ப ரேலும்
இனி, அவன் காண்பறிய னேலும்-
இனியவன்
கள்ளத்தால் மண்கொண்டு
விண்கடந்த பைங்கழலான் உள்ளத்தின் உள்ளே உளன்!"

(83 - மூன்றாம் திருவந்தாதி)

திருமாலனைப் பற்றி யார் வேண்டுமானாலும் எதை
வேண்டுமானாலும்  எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும்;
காண முடியாதவன், காணக் கிடைக்காதவன் என்றும், மாயன் என்றும் கூடச் சொல்லிக் கொள்ளட்டும். அவன் என் உள்ளத்தின் உள்ளே உறைந்திருக்கிறான்.
அது போதும் எனக்கு'
என்கிறார் ஆழ்வார்!

மிக எளிமையான ஆனால் ஆழமான கருத்து இது.

உயிர் என்பது என்ன? மூச்சுக் காற்று தானே! சுவாசத்தைப் பார்க்க முடியாது தான்.  அதற்காக அது இல்லை என்றாகிவிடுமா? அதை உணர முடியுமல்லவா! மின்சாரத்தைப் பார்க்க முடியாது. ஆனால் தொட்டால் அந்த மகத்தான சக்தியை உணர முடிகிறதே! பரந்த இவ்வுலகில் நம்மால் பார்க்க முடியாத பொருட்கள், உயிர்கள் எத்தனையோ உள்ளன. அவற்றை நம்மால் கேட்கவோ, உணரவோ, பார்க்கவோ, துய்க்கவோ  முடியாது  என்பதாலேயே அவற்றை இல்லவே இல்லை என்று சொல்ல முடியுமா?
காற்றும் மின்சாரமும் பார்க்க முடியாதவை. வடிவம் அற்றவை. ஆயினும் அவற்றின் பலன்களின் வாயிலாக உணரத்தக்கவை.
இறைவனும் அப்படியே. 'கடந்து உள் உறைபவனே கடவுள்' என்பதே ஆழ்வாரின் பதில்.

இறைவன் நிற்பதும், நடப்பதும், கிடப்பதும் நம் நெஞ்சுளே என்கிறார்கள் நம் ஆழ்வார்கள்.

தெய்வம் என்றால் அது தெய்வம்; சிலை என்றால் வெறும் சிலைதான்
என்றார் கண்ணதாசன்!

உளன் எனில் உண்டு அவன் உருவுகள்.

இலன் எனில் உண்டு அவன் அருவுகள்.

No comments:

Post a Comment