Thursday, 30 August 2018

பாசுரம் - பரவசம் - 12

நாமம் என்றால் ஒருவரின் பெயர்.
பெயர்சூட்டு விழாவை நாமகரணம் என்பர்.

அண்ணா நாமம் வாழ்க என்று எம்ஜியார் சொன்னது அறிஞர் அண்ணா அவர்களின் பெயரை.

ஆங்கிலர் மனிதனுக்கு வைக்கும் பெயர்கள் அஃறிணையாக இருக்கும்.  உ-ம் Blackstone.
தமிழில் பெயர்த்தால் அது மண்ணாங்கட்டி.

தமிழிலும் வித்தியாசமான நாமகரணங்கள் உண்டு.

ஹைகோர்ட் மகாராஜா, உள்ளேன் ஐயா, கும்புடறேன் சாமி என்ற பெயர்களையும் நாம் தற்போது கேள்விப்படுகிறோம்.

நம் தேசத்தில் பெரும்பாலும் கடவுளின் பெயரையே குழந்தைகட்குச் சூட்டுகிறாம்.

ஏன் தெய்வத்தின் பெயர்?  என்ற கேள்விக்கு பெரியாழ்வார் திருமொழியில் ஒரு பதில் உள்ளது.

'மண்ணில் பிறந்து மண்ணாகும்,
மானிடப் போரிட்டு அங்கு
எண்ணமொன் றின்றியிருக்கும்
ஏழை மனிதர்காள்!
கண்ணுக் கினிய கருமுகில்
வண்ணன் நாமமே!
நண்ணுமின் நாரணன் தம் அன்னை நரகம்புகாள்!

(4-6-7 பெரியாழ்வார் திருமொழி)

நாம் பிறப்பதும், தவழ்வதும், நடப்பதும், வாழ்வதும், மடிவதும் பின்பு புதைவதும் இந்த மண்ணிலே. மண்ணோடு மண்ணாய்ப் போகின்ற மனிதரின் பெயரை பிள்ளைகளுக்கு இடுவதா? அவர்கள் மறைந்தால் அப்பெயர்களும் மறைந்துவிடும்.

இறைவனின் இனிய பெயர்களைச் சூட்டினால் பெயரும் நிலைக்கும், நாம் மரித்தபின் நரகமும் போக மாட்டோம் என்கிறார் பெரியாழ்வார்!

நாம் சளைத்தவர்களா என்ன?

தாத்தாவிற்கு/ பாட்டிக்கு அவர்களது பெற்றோர்கள் இறைவனது திருநாமத்தைச் சூட்டினார்கள் அல்லவா?

அந்த மனிதர்களுக்கு சூட்டப்பட்ட இறைவனின் நாமத்தை நம் குழந்தைகட்கு நாம் இட்டால்
இறைவன் நாமமும் ஆயிற்று. பெயர் சொல்லும் பெயரன்/ பெயரத்தியும் ஆயிற்று!

எப்படி?

வளர்ந்ததும் தனது பெயரை அரசிதழில் வெளியிட்டு தனது பெயரை மாற்றிக்கொள்பவர் பலர். வசதி, சுருக்கம், மதமாற்றம் ஆகியவையே அதற்கு முக்கிய காரணம்.

என் அண்ணனுக்கு என் தாத்தா தனது பெயருக்குப் பதிலாக பெருமாள்+நேரு+ ரமணர் நினைவாக 'வெங்கட்ட ரமணானந்தன்' என்று பெயரிட்டார். என் சகோ-வை (அதாங்க ப்ரோ)
முழுப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதற்குள் அவர் அடுத்த தெருவிற்கே போய்விடக் கூடிய அபாயம்  இருந்ததால் அவர் வெங்கட் என்று தன் பெயரைப் பின்னாளில் சுருக்கிக் கொண்டார்.

மகனுக்கு மாமனாரின் பெயரை வைத்துவிட்டு 'அடேய், ராகவா' என்று விளித்து வசைபாட முடியாது என்பதால் எனக்கு 'சுந்தர்' என்று இலவச இணைப்பாக வீட்டுப் பெயர் ஒன்றையும் வைத்தது போல் மற்றொரு பெயர் சூட்டும் வழக்கமும் இங்கு பலருக்கு உண்டு.

ஸ்ரீரங்கத்தில் முப்பெயர் வைக்கும் வழக்கம் இன்றும் உண்டு.
உ-ம் தீபக் @ நாராயணன் @ சுதர்சன். ஆனால்  அழைப்பதென்னவோ வேறுமாதிரி. அது வேறு விஷயம்!

மொத்தத்தில் முன்னோர் பெயரும் கடவுள் பெயலும் ஒன்றாக இருந்தால் ஆழ்வார் வாக்கு நிலைக்கும்.

இல்லையென்றால்?

சொர்கம், நரகத்தை விடுங்கள்.

பெரியவர்களின் பெயர்கள் நிலைக்காது.

பி.கு:

பின்னாளில் நாமும் அவர்களாவோம்!

No comments:

Post a Comment