Wednesday, 11 April 2018

அது ஒரு ஏப்ரல் 12

1989ல்
இதே நாள்....

நான்
வழக்குரைஞனாகப்
பிறந்த நாள்.

விண்ணின்
கார்மேகத்தைப் போல,
கண்ணின்
கருவிழிகளைப் போல
அடைமழைக்கான
குடையைப் போல,
பள்ளியின்
கரும்பலகையைப் போல,
கருஞ்சீருடையும்
புனிதமானது
என்பதை அறிந்த நாள்.

சட்டமும் நீதியும்
பரம்பரைச் சொத்தாக
அடைந்த நாள்.

நாம் வாழும் வாழ்க்கை
நமக்கானது மட்டும்
அல்ல என்பதைத்
தெரிந்த நாள்.

உண்மைக்கும் நேர்மைக்கும்
உலகில் என்றும்
மதிப்புண்டு
என்பதைக் கற்ற நாள்.

விழிகள் மூடினும்
மனம் உறங்காது
என்பதைப் புரிந்த நாள்.

வாய்ச் சொல்லில் வீரரடி
என்ற பழிச் சொல்லைப்
பொய்யாக்கத் துணிந்த நாள்.

பாட்டனும் பூட்டனும்
விட்டுச் சென்ற நெறிகளை
கற்பினும் பெரிதென
உணர்ந்த நாள்.

போற்றுதலையும்
தூற்றுதலையும்
தலைக்குள் கொள்ளாது
என் கடன் பணி செய்து கிடப்பதே
என்றிருக்கப் பழகிய நாள்.

இன்னும் கொஞ்சம் தான்
என்றவாறு படியேறி மலையேறும்
பரவசப் பக்தனைப் போல
சோர்விலும் மகிழும் நாள்.

அந்த நாளை
மனதில் கொண்டு
உதட்டில் சிரிப்பையும்
உள்ளத்தில் அன்பையும்
நிறுத்திய படி
வாழ்த்துக என்றே
உற்றாரையும் நல்லோரையும்
நான் பணிந்து வணங்கும்
நாள்...

No comments:

Post a Comment