கவிதையெல்லாம்
எழுதுகிறாயாமே,
அப்படியா?
என்றாள்.
வார்த்தைகளை
மடித்துப் போட்டு
கொடியில்
துணிகளைப் போல்
தொங்க விடுகிறேன்.
அதுவா கவிதை? என்றேன்.
எழுதுவதெல்லாம்
மற்றவர்களைப் பற்றி
மட்டும் தானா?
புருவம் உயர்த்திக் கேட்டாள்.
உன்னிடம் இருக்கும்
என்னை விடுவித்து
நீ என்னிடம்
அனுப்பினால் தானே
நீயாகியிருந்த
நான் நானாகி
உன்னைப் பற்றி
எழுதமுடியும்?
என்றேன்.
இதுவே ஒரு
கவிதையன்றோ!
என்றாள்.
நீ தேநீர் போடுவது
சமையல் என்றால்
நான் கிறுக்குவதும்
கவிதையே என்றேன்.
நீ இப்போதும்
எழுதுகிறாயா?
மெளனம் கலைத்துக்
கேட்டேன்.
நாம் கடைசியாகச்
சந்தித்த நிமிடத்தில்
உறைந்து போனேன்,
அப்போதே இறந்தும்
போனேன்.
எனக்கு நானே
எரியூட்ட வழியின்றி
இன்றும் உடலோடு
வாழ்கிறேன்.
உயிர் எப்படி எழுதும்?
என்றாள்.
போதும் கவிதை
என்று
சொல்லிவிட்டேன்.
No comments:
Post a Comment