எங்கிருந்தோ
மிதந்து வந்தது
யாரோ இசைத்த
குழல் இசை.
இதயத்தை நனைத்து
உயிரை உருக்கி
மனதைக் கரைத்துச்
சென்றது
வேங்குழல் நாதம்.
யாருக்குச் சொந்தம்
அந்த இன்னிசை?
என்று கேட்டது குயில்.
என்னிடமிருந்து
பிறந்ததால்
எனக்கே சொந்தம்
என்றது மூங்கில்.
வெட்டி எடுத்து,
துளைகளிட்டுக்
கொடுக்காமல்
எப்படி இசைக்கும்?
என்றான் செய்தவன்.
செய்தால் மட்டும் போதுமா?
புல்லாங்குழலால்
தன்னைத் தானே
வாசிக்க முடியுமா?
என்றான்
இசைக் கலைஞன்.
எல்லாவற்றையும் கேட்டபடி
இசையைச் சுமந்து,
ஜீவனை நனைத்து
இதமாய்
வீசிக் கொண்டிருந்தது
காற்று.
No comments:
Post a Comment