என்னைச் சுற்றிலும்
கூப்பாட்டுக்
கூச்சலின் கூத்து.
மனதின் கதவுகள் எல்லாம்
மெளனித்துக் கிடக்க
காதுகளைக் கடந்து
உள் துளைத்து குடிகொண்டது
ஓசை.
மனதின் இரைச்சலில்
வேறேதும் கேட்கவில்லை
செவிகளுக்குள்.
ஊரடங்கி உறங்கினாலும்
உள்ளுறைந்த சப்தம் மட்டும்
அடங்காமல் திமிறுகிறது.
பேசிய வார்த்தைகளைத்
திரும்பப் பெறத் தெரியாத
நாவு
உதடுகளுக்குள்
அடங்கிக் கிடக்கிறது.
கூக்குரலின் தாண்டவம்
தாங்காது
இடையிடையே
திடுக்கிட்டு
விழிக்கிறது என் தூக்கம்.
உடல் வாடி ஓய்வெடுக்கும்
பொழுதுகளிலும்
வீரியம் ஓயாமல்
துவண்டு மருள்கிறது
மனம்.
அணைக்கின்ற
குளிர் நீரும்
தகித்துச் சுட்டுவிட
எதைக் கொண்டு
அணைப்பேன்
இந்த மனமென்னும்
கொதிகலனை?
Fantastic
ReplyDelete