தெய்வத் தமிழ் அமுது-5
------------------
தோழர்.....வேண்டாம்,வேண்டாம்.
இப்போது அந்த வார்த்தைக்கு நேரம் சரியில்லை. அதனால் நண்பன் என்றே சொல்வோம்.
நண்பன் என்ற வார்த்தைக்கான அர்த்தமாகட்டும், அல்லது அதற்கான இலக்கணமாகட்டும், தமிழ் இலக்கியம் தொடாத உச்சம் இல்லை.
ஆனால் அதை பொய்கையாழ்வார் சொல்லும் பாங்கு இன்னும் சிறப்பு.
திருமாலின் உறுதுணை ஒரு அரவம். பெயர் ஆதிசேஷன். அது திருமாலின் பலப்பல அவதாரங்களில் பெரும்பங்கு பெற்றது என்பது நம்பிக்கை. ராமாயண காதையில் வரும் ராமனின் இளவல் லட்சுமணன் என்பது ஆதிசேஷனின் அவதாரம் என்பர்.
ராமானுஜரும் ஒருவகையில் அப்படியே. ராமனின் அனுஐன் தான் ராமானுஜன். அனுஜன் என்றால் தம்பி. ஆக லட்சுமணனின் அவதாரமே எத்திராஜன் ராமானுஜர் என்பர் சிலர்.
அதிருக்கட்டும்.
இந்த ஆதிசேஷனை வைத்து நட்பின் ஆழத்தைப் பொய்கையாழ்வார் விளக்கும்போது அப்பாசுரம் சொல்லும் நட்பின் இலக்கணத்தின் வீச்சு அபாரம்.
'சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம், நீள்கடல் என்றும் புணையாம், மணிவிளக்காம், பூம்பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு.'
(முதல் திருவந்தாதி/பொய்கையாழ்வார்)
ஆதிசேஷன் அன்புடைத்தெய்வம் திருமாலுக்கு என்னவெல்லாம் செய்கிறது?
அவன் நடந்தால் இது குடை.
அவன் அமர்ந்தால் இது சிம்மாசனம்.
அவன் நின்றால் இது காலணி.
அவன் தூங்கினால் இது மெத்தை.
இரவில் கண்மணி மூலம் வெளிச்சம் தரும்.
சமயங்களில் பட்டாடையாகவும் தலையணையாகவும் அது இருக்கிறது'
ஆழ்வாரின் திறத்தைப் பாருங்கள்.
உற்ற உறுதுணை என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதை மாலனின் அரவத்தை வைத்து இதல்லவா நட்பு? தன்னலம் கருதாத உறவு? என்று குறிப்பால் நச் என்று உண்த்திவிட்டாரே!
ராமனுக்கு ஒரு லட்சுமணன் போல, துரியாதனனுக்கு ஒரு கர்ணன் போல நமக்கு ஒரு ஆதிசேஷன் அமையாவிட்டாலும் ஒரு அல்சேஷனாவது கிட்டுமா?
No comments:
Post a Comment