Thursday, 2 February 2017

பாசுரம்- பரவசம்-3

தெய்வத் தமிழ் அமுது-3
------

ஒரு திருக்குறளில் சொல்லப்பட்ட அதே வார்த்தைகள்(சீர்) நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தின் ஒரு பாசுரத்திலும் வருகிறது. ஆனால் அச்சீர்கள் பயன்படுத்தப்படும் உட்கரு வேறு.

முதலில் குறள் :

'வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்'

இக்குறளின் பொருள்:

'விருந்தினர்களுக்கு உணவிட்டு மிச்சத்தை உண்பவனுக்கு தன் சொந்த நிலத்தில் விதை போடவேண்டிய அவசியம் இருக்காது '

விருந்தினர் போற்றுதும் எனப் பகர்வது வள்ளுவரின் குறள் வழிக்குரல்.

அதே சீர்கொண்டு திருமழிசை ஆழ்வார் எழுதியது என்ன?

'வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த பக்தி உழவன் பழம் புனைத்து? மொய்த்து எழுந்த கார் மேகம் அன்ன கரு மால் திரு மேனி நீர் வானம் காட்டும் நிகழ்ந்து'

இப் பாசுரம் நமக்குப் பகர்வது என்ன வென்றால்:

"கடவுள் என்னும்  ஆன்மிக உழவனை அடிபணிந்தால் அவன் நிலத்தில் நாம் ஏதும் விதையை விதைக்க வேண்டுமா என்ன?"

வைணவத்தின் அடிப்படை அம்சம் சரணாகதி. அவனை அன்னவர்க்கே சரண் நாங்களே என நாம் பாதம் பணிந்தால் போதும்; நம்மை அவனாகவே ஆட்கொண்டு அருள்வான்.

இதை வைணவக் கடவுளான பெருமாள் தன் திருமேனியின் மூலமும் உருவகப் படுத்திக் காட்டுகிறார்.

எப்படி?

பொதுவாக கடவுளரின் திருமேனியில் யாமிருக்க பயமேன் என்ற தோரணையில் அவர்களது திருக்கரங்கள் உயர்த்தி நம்மை ஆசிர்வதித்து அருள் தரும், இல்லையா? அதை வடமொழியில் 'அபய ஹஸ்தம்' என்கின்றனர்.

இப்போது திருமலைத் தெய்வத்தின் திருவுருவத்தை மனக்கண்ணில் வைத்து நினைத்துப் பாருங்கள். அவனது வலக்கரம் என்ன செய்கிறது?

'என் பாதம் பணிந்து சரணடைந்தால் போதும், மற்றவை என் பொறுப்பு' என்று அவன் பாதத்தைச் சுட்டிக் காட்டி  நம்மை அவனது கமலபாதங்களை அடிபணியச் சொல்கிறது. வடமொழியில் இதை 'வரத ஹஸ்தம்' என்கின்றனர்.

திருமலையில் அவன் சன்னிதி நுழைகையில் குலசேகரன்படி அருகே இதை அழகாக நெய்து காட்டும் திரைச் சீலையை அடுத்த முறை அங்கே செல்லும்போது பார்க்கத் தவறாதீர்.

அந்த இறைத் தத்துவத்தை அழகுறச் சொல்வது நம் தமிழ் மறையின் தனிச்சிறப்பு!

No comments:

Post a Comment