யோசிக்காமல் நாம் ஆப்ஷனில் விடும் கேள்வி எது என்றால் 'கடவுளைப் பற்றி சிறு குறிப்பு வரைக' என்பதாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.
ஏன் எனில் அந்தக் கேள்விக்கு மனிதரிடையே ஒத்த கருத்தும் இல்லை, கருத்திசைவும் இல்லை.
அவன் இருக்கிறானா?
இருக்கிறான் என்றால் உருவம் உண்டா?
உருவு உண்டென்றால் பார்க்க முடியுமா?
பார்க்க முடியும் என்றால் பார்த்தவர் யார்?
இப்படியாக ப்ளோ சார்ட் வடிவில் வினாக்கள் மிகும்.
உண்மையில் அவனை எப்படி உணர்வது என்ற ஐயம் காலம்கடந்து தொடர்ந்து வருகிறது, விடை புரியாமல்.
இந்தக் கேள்வி நம்மாழ்வருக்கும் எழ அவர் தமது திருவாய்மொழியில் சொல்வதைக் கேட்டால் விக்கித்து நிற்கவேண்டும்.
' ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்காற் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணைப் பெரிதுடைத்து எம் பெருமானைக் கூறுதலே' என்பது பாசுரம்.
பொருளறியுங்கால் திகைப்பே மிஞ்சும்.
மிகப் பெரிய தத்துவார்த்த உண்மையை எளியாரும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துச் சொல்வதென்பது ஒரு கலையென்றால் அக்கலையில் நம் நம்மாழ்வார் ஒரு சூப்பர் ஸ்டார்.
அவன் நாம் காணும் ஆண்களைப் போன்றவன் அல்ல; நாமறிந்த பெண்களைப் போன்றவனும் அல்லன். இரண்டுமில்லாத திருநங்கைகளைப் போன்றும் அல்லன். அவனைக் கண்களால் காண முடியாது. அவன் உள்ளவனும் அல்ல. இல்லாதவனும் அல்ல. வேண்டும்போது தேவைப்படும் உருவில் தோன்றுவான். தோன்றாமலும் இருப்பான். என் பெருமாளை உணர்ந்தறிவது மிக்க கடினமானது' என்பது இப்பாசுரத்தின் சாரம்.
நம்மாழ்வாருக்கே இறைவன் எத்தகையவன் என்று விளக்க கடினமானது என்றால், அற்பம், நாமெல்லாம்?
அன்பே கடவுள் ஒன்றான பிறகு அவனை இருக்கிறானா, இல்லையா என்று தேடுவது தேவையற்றது. அன்பு மிக்கவருக்கு அவன் தேவைப்பட்ட கோலத்தில் தோன்றுவான். இல்லையெனில் தோன்ற மாட்டான்.
நாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் வைத்துள்ள வரையறைக்குள் அவனை அடைக்க முடியாது.
இந்த புறத் தோற்றங்களை எல்லாம்
கடந்து உள் வசிப்பவனே இறைவன் என்பதே இப்பாசுரம் சொல்லும் அம்சமாகும்.
கொஞ்சம் க்வாண்டம் இயற்பியலில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது அழகாய்ப் புரியும்.
உளன் எனில் உளன், இலன் எனில் இலன்.
No comments:
Post a Comment