Tuesday, 31 December 2019

பயணி....

பயணம் இனிது.
அதன் பாடங்கள் 
இனியன.

முகத்தில் காற்று 
அறைய அறையப்
பயணப்படு.
அது மனதைச்
சலவை செய்யும்.

சொட்டச் சொட்ட
மழையில் நனைந்து
பயணம் செய்.
மனதின்
ரணத்துக்கு அதுவே
களிம்பு.

காலாற கைவீசி 
நடந்து பார்.
உள்ளே ஒரு வசந்தம் 
குடிபுகும்.

குடையை மற.
மண் நனைத்த
மழைத்துளி 
உடல் தழுவி உன்
சிந்தையைச் செப்பனிடும்.

அலுவலைச் 
சற்றே தள்ளி வை.
குடும்பம் பெரிதாய்
உணர்வாய்.
நீ தானே அவர்கள்?

எத்தனை பெரிய
வானம்?
இத்தனை நாள்
யார் மறைத்தது!

பூமிக்கு எத்தனை
யௌவனம்?
யார் பூசினார்
அரிதாரம்?

யார் கண்டார்?
விடை பெற முடியாக்
கேள்விகளின்
விடைகள் உன்
பயணத்தின் பாதையில் 
பதிந்திருக்கலாம்.

பயணித்துப்பார்.
வழியெல்லாம்
போதி மரம்
அணி வகுக்கும்.

உன்னை உணர்ந்து
உன்னைப் புரிந்து
உன்னை உயிர்ப்பிக்க....
பயணி.

பூட்டாத பூட்டு


மனம் ஒரு 
வினோத
வினைத்தொகை.

ஓயாத இரைச்சல்
கொண்ட
மெளன அரங்கம்.

விடுதலையே 
அறியாத
சிறைச்சாலை.

எண்ணங்கள் 
உடனுக்குடன்
ஏற்றுமதியாகும்
ஆலை.

உள்ளே இருப்பது
எதுவென்றே 
தெரியாத
எண்ணக்கிடங்கு.

வெட்ட வெட்டத் 
தீராத
மர்மச் சுரங்கம்.

இதயத்தின்
அறிவுரையைத்
திசை திருப்பும் 
கள்ள மாலுமி.

சிந்தனையை
வடிகட்டி
உணர்ச்சிகளை 
வெளியனுப்பும்
சல்லடை.

சில சமயம்
உணர்ச்சிகளை
கொட்டிவிட்டு 
எண்ணங்களை 
ஏற்றுக்கொள்ளும்
முறம்.

பேரன்பும் பேரழிவும்
ஒரு சேர
சூல்கொள்ளும்
அகப்பை.

மனம் ஒரு
வாயிற்கதவு.
ஆயினும்
அதைப் பூட்டுவதும்
திறப்பதும்
உள்ளிருப்பவனே.

Sunday, 29 December 2019

மனக்கேணி

எவரோ வந்து
எறிந்துவிட்டுப் போனார்.

ஆழத்தில் 
அமிழ்ந்து போனது 
கல்.

அலைகளாகப் 
பரவி அடங்கியது 
தண்ணீர்.

அதிர்ந்து ஆடிப்போனது
கிணற்றுக்குள் விழுந்த 
நிலா.


உயர்திணை


காற்றே,
மேனிக்கு உள்ளே
நீ 
புகும் போது
சுவாசம்.

மேனியின் உள்ளே
நீ
இருக்கும் வரை
மூச்சு.

மேனியின்
துளைகளின் வழி
நீ
வெளியேறி விட்டால்
மரணம்.

ஆயின்,
மூச்சற்றுப் போன
பிறகும்
துளைகளின் வழியே
காற்றை 
இசையாக
மொழி பெயர்க்கும்
அந்த மூங்கில் 
அல்லவா
உண்மையில்
மெய்?

Monday, 15 July 2019

நீ, நான், நிலா....

நிலாவின் தாசன்
நான்.
நீயோ மழையின்
ரசிகை.

நிலவும் மழையும்
சேர்ந்திருந்த
ஒரு நாளில்
சந்தித்துப் பிரிந்த
தருணத்தில்
மழை நேரத்து
கரு முகில்கள்
வான் நிலவை
மறைத்துவிட,
திரண்டு கசிந்த
உன் கண்ணீர்
கன்னங்களை
அடையும் முன்
மழை நீர் 
அதை தன்னுள்
கரைத்துக்
கொண்டது.

இப்போது புரிகிறது,
நீ நிலா என்றால்
நான் மழை....

Saturday, 13 July 2019

மேக தாகம்

மேகங்கள் வசீகரமானவை.
வித விதமான
வண்ணம் தரித்து
நினைத்த போது உருமாறி
உள்ளங்கவர்வதால்.

மேகங்கள் வினோதமானவை.
வெண்மேகமாக
மழை தாராது
கார்மேகமாகிப்
பொழிந்து விடுவதால்.

மேகங்கள் பாவப்பட்டவை.
கர்ணனைப் பெற்ற
குந்தியைப் போல
தான் பிரசவித்த
மழை மீது தனக்கே
உரிமை இல்லாததால்.

மேகங்கள் மோகம் மிக்கவை.
ஆதவனின் ஒளியை
இரவல் பெற்றாவது
வெண் பஞ்சு முகில்கள்
வண்ணத் துகில்கள் ஆவதால்.

ஆயினும்
மேகங்கள் சாபத்திற்கும் உரியவை.
தரிசாக இருந்த மண்மகள்
ஒருபாடாகச் சூல் கொண்டு
பயிராகி நிற்கும் போது
வெள்ளமாக வந்து
அவளின் கர்ப்பத்தைக்
கலைத்து விடுவதால்.

Friday, 12 July 2019

சும்மா இருப்பதில்லை காற்று

அவன்:

தூக்கத்தில் வரும்
கனாக்களிலும்
ஏக்கத்தில் எழும்
வினாக்களிலும்
கடப்பதல்ல என் வாழ்க்கை.

மெளனமாய் ஓடும் ஓடைக்கு
தடையாய் அமையும்
பாறைகளே இசையாவது போல
பாரமான நிகழ்வுகளைச்
சுமந்து வரும்
உன் நினைவுகளால் நான்
நகர்ந்து கொண்டிருக்கிறேன்.

அவள்:

என் கதை வேறு.
வண்டு துளைத்ததால்
புல்லாங்குழலாய் ஆன
ஒரு மூங்கில் போல
உன் சுவாசக்காற்று
என் நாசிகளின்
வழியே உட்புகுந்து
நீ என் இதயத்தில்
காதலாய் இடம் பெயர்ந்தாய்.
நான் அதை
மொழிபெயர்க்க முடியாமல்
அனுநொடியும்
கசிந்து கொண்டிருக்கிறேன்.

அவர்கள்:

மரங்கள்
அசையாது இருந்தாலும்
சும்மா இருப்பதில்லை
அந்தக் காற்று.

Thursday, 30 May 2019

நீ, நான், மழை, நிலா...

வாகனம் முன்னோக்கியும்
நினைவுகள் பின்னோக்கியும்
விரையும் பொழுதுகளில்
தனிமைக்குத் துணையாய்
கூடவே வருவாய்.

துயில் இழந்த இரவுகளில்
மனம் குளிர
மர நிழலாய் சாலையில்
கோலம் இடுவாய்.

மழைத்தாரைகள்
மண்ணில் ஓடுகையில்
அதனூடே மிதந்து நகர்ந்து
மனதை நனைத்துச் செல்வாய்.

அவளும் நானும்
சந்திக்கும் போது
அழையா ஒற்றனாய்
தூரத்தில் காத்திருப்பாய்.

உன் ஒளியில் நனைந்தபடி
கைகோர்த்து நடை போட்ட
தருணங்களில்
மரங்களிலும் மலைகளிலும்
ஒளிந்தும் மறைந்தும்
மகிழ்விப்பாய்.

ஆனால்
நேற்றிரவில்
விழிகளில் நீர் சிந்தி
தளர்நடையாய்
அவள் அகன்று
சென்ற போது மட்டும்
நீ ஏன்
முகில் கொண்டு
மறைந்து கொண்டாய்?

Sunday, 10 March 2019

கல்

அமைதியாக
இருந்தது
அந்தக் குளம்.

யாரோ
கல் ஒன்றை
எறிந்துவிட்டுப்
போனார்கள்.

மெலிதான
ஓசை ஒன்று
மேல்மட்டத்தில்
எழுந்து அடங்கியது.

கல்
சத்தமே இன்றி
நீருக்குள்
விரைந்து அமிழ்ந்தது.

அது எழுப்பிய
அதிர்வுகள்
வட்ட வட்ட
அலைகளாகி
கரை சேர்ந்தன.

மிதந்து
கொண்டிருந்த
பூக்கள் மட்டும்
லேசாகத்
தள்ளாடிக்
கொண்டிருந்தன..

குளத்தில் கால்களை
நனைத்துக்
கொண்டிருப்பவர்களின்
மனதிற்குள்
மிச்சமிருந்தன
இன்னும் நிறைய
கற்கள்...

Sunday, 3 February 2019

உயிர் மூச்சு

அந்த பலூன்
வியாபாரி
நடைபாதையில்
செத்துக்கிடந்தான்.

சற்று நேரம்
முன்பு அவனிடம்
பேரம் பேசி
வாங்கியிருந்த
ஐந்து ரூபாய் பலூன்
என் குழந்தையின்
கைகளில் தவழ்ந்து
கொண்டிருந்தது.

கொஞ்ச நேரம்
முன்புவரை
தன் மூச்சுக் காற்றை
ஊதி ஊதி
அவன் நிரப்பியிருந்த
பலூன்கள் எல்லாம்
பிடி தளர்ந்து
உயரே
பறந்து போயின.

சேதி கேட்ட
அவனின் மனைவி
பதறியடித்து
ஓடி வந்தாள்.

இவள் கையிலிருந்த
பலூன் சட்டென
வெடித்து உடைந்தது.

மூச்சு விட மறந்த
கணவனைப் பார்த்து
அவளும்
உடைந்து போன
பலூனைப் பார்த்து
இவளும்
கதறி அழுவதை
எல்லோரும்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்,
அந்த பலூன்களில் இருந்தது அவனது
மூச்சா? அல்லது உயிரா?
என்பது புரியாமல்.

கரும்பலகை மனது

யார் யாரோ வந்து
எதை எதையோ
எழுதிவிட்டுப்
போகிறார்கள்.

யார் யாரோ வந்து
அவற்றை
அழித்துவிட்டுப்
போகிறார்கள்.

என்னென்னவோ
எழுதப்படுகின்றன.
ஏதேதோ மொழிகளில்.
ஏதேதோ வடிவங்களில்.
ஏதேதோ வார்த்தைகளில்.
யார் யாருக்காகவோ...

அவை எல்லாமே
அடுத்தவர்களால்
அழிக்கப்படுகின்றன.
மேலோட்டமாக
சில சமயம்.
சுவடுகளின்றி
பல சமயம்.

அவை யாவும்
என் மீது
எழுதப்படுகின்றன.
ஆனால்
எனக்காக அல்ல.

இன்றும்
யாரோ வந்து
என்னில் எதையோ
எழுதிவிட்டுப்
போய்வி்ட்டார்.

நான்
காத்திருக்கிறேன்.
வழமையாக.
மெளனமாக.
நாளைப்
பொழுதிற்காக.

வேறு யாரோ வந்து
பழசையெல்லாம்
அழிப்பதற்காக.

புதிதாக
எதையாவது
கிறுக்குவதற்காகவும்தான்.

Thursday, 24 January 2019

நாகரிகம்

தனக்காக உதிக்காது
சூரியன்.
தனக்காக மலராது
பூக்கள்.
தனக்காக காய்க்காது
மரங்கள்.
தனக்காக சுற்றாது
பூமி.
தனக்காக வீசாது
தென்றல்.
தனக்காக பாயாது
நதிகள்.

தனக்காக அழிக்கிறான்
மனிதன்.

நதிக்கரைகளில்
வளர்த்ததாம் நாகரிகங்கள்.
இன்னும் அகலவில்லையே
அழுக்கு.

Sunday, 20 January 2019

அறியாது...

கிளையிலிருந்து
உதிரும் முன்
பூ
காற்றிடம்
கடைசியாகப் பேசியது என்னவென்று
வண்டுகள் அறியாது....

குடையை விரித்து
நனைய மறுக்கும்
மனிதரைப் பார்த்து
மழைத்துளிகள்
பழித்தது என்னவென்று
மேகம் அறியாது.

வெட்டப்பட்ட மரத்துடன்
ஒரு வனத்தின் சரித்திரமும்
புதைந்து போவதை
அந்தக் கோடாலி
அறியாது..

காதலைத் துறந்து
அவனது கரம் பற்றும்
அவளின் மனதின்
வதையை அந்த மோதிரம்
அறியாது..

அறியாத உணர்வுகளைக்
கடந்தபடி நாட்கள்
நகர்ந்து செல்வதை
அந்தக் காலமும்
அறியாது.

Saturday, 19 January 2019

பெண் பேசிய காமம்

Book Review

Title :      Radhika Sanatawanam

Author:  Muddupalani.

நம்மால் அதிகம் அறியப்படாத அந்தப் பெண்மணியின் எழுத்துக்கள் கொஞ்சம் ரசமானவை.

அவரைப் பற்றி எனக்கு முதல் முதலில் தெரியவந்த போது மிக மிக ஆச்சரியப்பட்டேன்.

நமது ஆண்டாள் தெலுங்கு தேசத்திலும் மிகப் பிரபலம்.
அங்கு அவள் 'கோதா' என்று சிலாகிக்கப்படுகிறாள். அவளது 'திருப்பாவை' தெலுங்கு தேசத்தில் 'கோதாம்ருதம்' என்று சிலாகித்துக் கொண்டாடப்படுகிறது.

1989ல் சென்னையில் திருவல்லிக் கேணியில் எனது 'மேன்ஷன்' வாசத்தின் போது ரமேஷ் என்ற ஒரு ஆந்திர மாணவன் என் பக்கத்து அறை வாசியானார்.

அவரிடம் ஒரு முறை ஆண்டாளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன ஒரு சின்னத் தகவலின் மூலம் முதன் முதலாக முத்துப்பழனியைப் பற்றி எனக்கு ஓர் அறிமுகம் கிடைத்தது. அவர் திருப்பாவையைத் தெலுங்கில் மொழிபெயர்த்தார் என்பது தான் அத்தகவல்.

அப்போது அந்த நண்பர் என்னிடம் இன்னொன்றும் சொன்னார்:

"தெரியுமா ராகவன்? முத்துப்பழனி ஜெயதேவரின் 'அஷ்டபதியை'யும் அழகாக அவர் தெலுங்கில் மொழி பெயர்த்திருக்கிறார். ஆனால் அவரது கவிதைகளைப் படித்தால் எனக்கு எனது வீட்டில் நன்றாக வசவுதான் கிடைக்கும்."

அதற்கான காரணம் அவர் ஏதோ ஒரு நூலகத்தில் தேடி அவரது 'ராதிகா சந்தவனமு' என்ற ஒரு கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேடி எடுத்துக் கொடுத்த போது தான் புரிந்தது.

அவரது அந்தக் கவிதைகளின் மொழிபெயர்ப்பைப் படித்து விட்டு ஆடிப்போனேன் என்பதே பொருத்தமான வார்த்தை.

கலவியியலின்( sex) பலப்பல அம்சங்களையும் அவர் விரகம், தாபம், ஏக்கம்,  தவிப்பு போன்ற இதர பெண்ணியல் சார்ந்த அம்சங்களோடு வெளிப்படையாகத் தீட்டியிருந்தார். 

அந்த எழுத்துக்கள் ஏன் மக்களால் ஆட்சேபிக்கப்பட்டது என்பது எனக்கு அப்போது புரியவில்லை.

இப்போதும்.

செக்ஸ் பற்றியோ அதன் இன்ன பிற விவரங்கள் குறித்தோ வெளிப்படையாக சிலாகித்து எழுதவோ, பேசவோ பெண்களுக்கு எது தடையாக இருக்கிறது என்பதும் புரியவில்லை.

ஆனால் அத்தகைய தடைகளை பெண்களுக்கு எதிராக நிறுவியது ஆண் வர்க்கம்தான் என்பதும், அத்தடையை பெண்கள் மீறினால் ஆண்களின் பார்வையில்தான் அசிங்கப்படுத்தப்படுகிறார்கள் என்பது நிச்சயம் என்பன மட்டும் புரிகிறது.

தேவதாசியான முத்துப்பழனியின் பெருமையை வெளிக்கொணர அந்தப் பரம்பரையில் வந்த 'பங்களூரு நாகரத்தினம்' என்ற இன்னொரு நடன/ இசைக் கலைஞர் பிறக்கவேண்டியிருந்தது.

ஒரு வேளை முத்துப்பழனி தேவதாசியாக இல்லாதிருந்தால் இவற்றை இந்த அளவிற்கு எழுதியிருக்கமாட்டார் என்கிறார் என் நண்பர்.

அதனால் மட்டுமே அவரால் அப்படி எழுத முடிந்தது என்ற கருத்தில் உடன்படுதல் முறையா?

Tuesday, 15 January 2019

யாதெனில்- 4

எனப்படுவது யாதெனில்

/ ஆண்டவன் /

மனிதரைத் தவிர
வேறு எந்த உயிர்களாலும்
தொழப்படாதவன்.

----

/ அச்சம் /

வானத்தைப் பார்க்கும் போது வாராது அங்கிருந்து
பூமியைப் பார்க்கும் போது
வருவது.

-----
/ தனிமை /

சென்று வர இனிமை.
ஆனால்
தங்கி விடக் கொடுமை.

நான் என்பது நானல்ல

என் மனதை
நானே எதிர்க்க
முடிகிறபடியால்
நான் என்பது
நான் அல்ல.

எண்ணங்களின்
தொகுப்புகள்
என் சிந்தையை
மறுதலிப்பது
வெறும்
சந்திப் பிழையன்று.

என் மனதை நானே
அதட்டி வைக்கிறேன்.
சமயங்களில்
என் மனதை நானே
ஆமோதிக்கிறேன்.

நான் என்பது
எது என்பதை
நான் அறிவதை
நானே தடுக்கிறேன்.

என்ன சொல்லி
என் மனதிடம்
நான் போரிட்டு
ஜெயிக்க இயலும்?

என்ன செய்து
என் மனதின்
குரலை நானே
நெரிக்க முடியும்?

என்னையே என்னால்
எப்படி அப்படி
ஏய்க்க முடிகிறது?

மனதுக்கும் மூளைக்கும்
மாறி மாறிப்
பேசிப் பேசி
என் எண்ணங்கள்
மொழியற்றுப் போகின்றன.

எண்ணங்களை
உற்பத்தி செய்துவிட்ட
பிறகு
இதயத்தின்
இம்சை தாளாது
மனது
ஓடி ஒளிகிறது.

இப்படியாக
என்னை விட்டு
நானே வெளியேறிய
கதையை
உங்களில் யார்
என்னிடமே சொல்லப்
போகிறீர்கள்?