ரயில் பயணத்தில்
மரங்களும் கட்டிடங்களும்
பின்னே சென்று
மறைந்து விட,
கூடவே வரும்
நிலாவைப் போல
நீ.
சந்தித்தோர் எல்லோரும்
ஒரு கட்டத்தில்
விடைபெற்று நின்று போக,
உன் நினைவுகள் மட்டும்
எப்போதும் என்னுடன்.
தொடுத்து வைத்த
பவழ மல்லிகைகள்
படங்களில்
ஏறிய பின்னும்
கைகளில் தொடரும்
வாசனையாக
உன் ஞாபகம்.
என்னையறியாது
நெஞ்சில் நிறைந்த
அந்தப் பாடலை
என் உதடுகள்
உச்சரிக்கும்போது
கண்ணில் மின்னும்
மின்னலாய்
உன் பிம்பம்.
மரித்த பின்
என் ஆன்மா
எப்படி உன் நினைவுகளைச்
சுமக்கும் என்பதறியாது
சாகாமல் இருக்கிறது
என் ஜீவன்.
No comments:
Post a Comment