ஒரு வழக்குரைஞன் சமூகத்திற்கு தன்னால் முடிந்த வரை உதவுதல் ஒரு அறம்.
பொது வாழ்வில் நேரடியாக இறங்கிப் பணியாற்றும் வழக்குரைஞர்களுக்கு மட்டுமே சமூக சேவைக்கு வாய்ப்பு அதிகம் கிடைக்கும்.
மற்றவர்களுக்கு?
அதிக வாய்ப்பு இல்லை என்பது உண்மை தான்.
அதனால் நான் ஒரு வழியில் என்னால் இயன்ற ஒரு காரியம் செய்து வருகிறேன்.
என்னைத் தேடி வரும் நபர்களுக்கு வழக்கு அல்லாத- ஆனால் -சட்டம் சார்ந்த ஆலோசனைகள் மட்டும் சொல்ல நேரும் போது அதற்கு நான் ஊதியம் ஏதும் வாங்குவதில்லை. அவர்கள் கொடுத்தாலும் பெறுவதில்லை. இதை என்னால் முடிந்த சேவை என்றே நான் நம்புகிறேன். எனக்கு இதில் நிறைய நேரம் செலவாகிறது. உண்மை. ஆனால் கிடைக்கும் திருப்தியோ அலாதி. தன் வாழ்க்கை தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பவனுக்குத் தான் நேரம் அவனுடையது.
ஒரு வக்கீலிடம் மக்களால் கேட்கப்படும் கேள்விகள் அவனை சிந்திக்கச் செய்யும். நிறையப் படிக்க வைக்கும். தெளிவு தரும். அந்த அனுபவம் வேறு ஒரு வழக்கிற்கு அவனுக்கு நன்கு பயன்படும்.
எத்தனை விதமான கேள்விகள் ஒரு வழக்குரைஞனை நோக்கி வீசப்படும் தெரியுமா? கணக்கில்லை. அவன் எங்கு போனாலும் அவனது தொழில் அவனை விடாது. மருத்துவர்கள் மாதிரி.
பிறப்பு இறப்பு பதிவு, நாமினி உரிமைகள், கடனுக்காக ஜாமீன் தருதல், பெயர் மாற்றம், உயில் பதிவு, திருமணப் பதிவு, வங்கிக் கடன், மருத்துவக் காப்பீடு, சாலை விபத்து என்று நீதிமன்றம் போகாத ஆனால் சட்டம் சார்ந்த அய்யங்களை ஒரு வழக்குரைஞன் ஊதியம் பெறாமல் தீர்த்து வைத்தால் சமூகம் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டாடும்.
இது நிஜம்.
நான் மட்டுமல்ல, இலவச சட்ட ஆலோசனையை முடிந்த வரையில் பலரும் தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களை எல்லாம் பொது மக்கள் தெரிந்து வைத்துக் கொள்வதிலும் நினைத்த நேரத்தில் அவர்களைத் தொடர்பு கொள்வதிலும் நடைமுறையில் பல சிக்கல்கள் உண்டு.
வேறு என்ன செய்யலாம்?
இதற்குத் தீர்வாக எனக்குத் தோன்றுவது இது தான் :
L P O (Legal Process Outsourcing.)
24 × 7 சேவையாக இலவச சட்ட ஆலோசனை வழங்குவதை ஒரு BPO அமைத்து ஒரு தன்னார்வ அமைப்போ, self help groupபோ, சட்ட உதவி மையங்களோ, நுகர்வோர் அமைப்புகளோ மிகச் செம்மையாகச் செய்ய முடியும். சாத்தியம்.
இளம் மற்றும் வளரும் வழக்குரைஞர்களையும் சட்ட மாணவர்களையும் இதில் ஈடுபடுத்தலாம். தேவைப்படும் போது கற்றறிந்த மூத்த வழக்கறிஞர்களையும், ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் வரவழைத்து விளம்பரமின்றி இச்சேவையை இலவசமாகத் தரலாம்.
எண்ணிப் பாருங்கள். எத்தனையோ மக்கள் இதனால் பயனடைவார்கள். ஏமாற்றப்படுவதிலிருந்தும் சுரண்டப்படுவதிலிருந்தும், பலப்பல ஏழைகளும், தொழிலாளிகளும், பெண்களும், விளிம்புநிலை மனிதர்களும் காக்கப்பட முடியும்!
இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் இது மிகச் சாதாரண ஒன்றே. ஒரு தொலைபேசி அழைப்பில் சரியான வழிகாட்டுதல் கிடைத்துவிடும். மிகப் பரவலான விழிப்புணர்வை இது ஏற்படுத்தும்.
Toll free service அதை முற்றிலும் இலவசமாக்கி விடாதா என்ன? என்ன, அதை நன்கு பரப்புரை செய்ய வேண்டும். அவ்வளவே.
தமிழ்நாடு மாநில சட்ட உதவி ஆணையம் நினைத்தால் இதை எளிதில் நடைமுறைப் படுத்த முடியும்.
செய்வார்களா?
No comments:
Post a Comment