Monday, 29 February 2016

மனிதம்

இதோ
உணவுமின்றி
உணர்வுமின்றி
ஒரு மனிதன்.

இப்போதே
சாகப் போகும்
தனி மனிதன்.

அவன் சாகக்
காத்திருக்கும்
வல்லூறு.

மெளனமாய்
மரித்துப் போன
மனிதம்.

போடா பாரதி...
எரிதழலும் எங்கே?
ஜகத்தினை அழிப்பதும் எங்கே?

வா மனிதா,
சூப்பர் ஸ்டார்ஸ் படம் பார்த்து
எல்லாம் மறப்போம் வா...

RIP

இறந்து போன
செய்தி கேட்டு
Rest In Peace
சொல்லப் போகும்
மனிதரே,
நான்
இருக்கும் போது
Live In Peace
ஏன்
சொல்வதில்லை?

யாசகம்

கையேந்தி வெளியே
யாசகம் கேட்டவனைப்
புறந்தள்ளி
கையேந்தி உள்ளே
இறைஞ்சுபவனைப்
பார்த்து
ஆண்டவன்
சபிக்கக் கடவ!

சொல்வதெல்லாம் உண்மை-14

சில மாதங்களுக்கு முன்பு.
மதுரை உயர் நீதிமன்றம்.
கண்டிப்புக்கு பெயர்பெற்ற அந்த
நீதியரசரின் நீதிமன்ற அறை. அவர் இளம் வழக்குரைஞர்களை ஊக்குவிக்கும் மனம் படைத்தவர்.

அவரிடம் ஒரு வழக்கை நடத்திய ஒரு இளம் வழக்குரைஞரிடம் அவர் ஒரு குறிப்பிட்ட சட்டப்பிரிவைப் பற்றிக் கேட்டார். அவருக்கு அது தெரிந்திருக்கவில்லை. இதையெல்லாம் பார்க்காமல் ஏன் வழக்கை நடத்தவேண்டும் என்று கடிந்து கொண்ட அந்த  நீதியரசர் அந்த வழக்கறிஞருக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுத்து MMBA பார் அஸோஷியேஷனில் உள்ள இ லைப்ரரிக்குச் சென்று அந்த சட்டப்பிரிவைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு திரும்ப வந்து வழக்கை நடத்தும்படி உத்தரவிட்டார்.

அங்கிருந்த என்னைப் பார்த்து அந்த இளம் வழக்குரைஞருக்கு எங்கள் சங்க நூலகத்தில் தேவையான உதவிகளைச் செய்யும்படி கேட்டுக்கொண்டார். நானும் எங்கள் வழக்கறிஞர் சங்கத்திற்கு செல்லிடப் பேசி மூலம் தொடர்பு கொண்டு அந்த வழக்குரைஞருக்கு ஆவன செய்யும்படி சொன்னேன்.

வெளியே வந்தால் அந்த இளம் வழக்கறிஞர் தன்னுடைய அங்கியை கழற்றிவிட்டு மோட்டார் சைக்கிளை  ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தார்.
' எங்க சார்?'
' வீட்டுக்குத் தான்!'
'என்ன சார், reference books பார்க்கலயா? என்று கேட்டேன். 'இன்னும் ஒரு மணியில உங்க கேசை எடுப்பாரே' என்றேன்.
'வேற வேலையில்லை..போங்க சார்' என்று சொல்லிவிட்டு coolers- ஐ அணிந்து கொண்டு விர்ர்ரெனக் கிளம்பிவிட்டார்.

நி்ற்க.

இங்கே நான் ஒரு flashback பற்றி சொல்லியாக வேண்டும்.

1989 ஏப்ரல்.

வழக்குரைஞராக நான் சென்னை உயர்நீதி மன்றத்தில் நுழைந்த முதல் நாள். King & Partridge சட்ட அலுவலகத்தில் பணி. மதியம் 1.30 மணி இருக்கும்.  சீனியர் என்னை அழைத்து ஒரு முரட்டு வழக்குக் கட்டை என்னிடம் கொடுத்து 'மதியம் லஞ்ச்மோஷன் கேஸ். MP for ABJ. You move it' என்றார். எனக்கு
மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. நான்கு வாய் சாப்பாட்டை அள்ளிப் போட்டுக் கொண்டு 2 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு போய்விட்டேன்.

டாண் என்று 2.15க்கு அந்த நீதியரசர் வந்தார். அவரைப்பற்றி பக்கத்தில் இருந்த வக்கீல் சொன்னதைக் கேட்டு வயிறெல்லாம் HCl மயம்.
கேட்டார். சொன்னேன்.
அடுத்து ஒரே ஒரு கேள்விதான் கேட்டார்.
நான் அம்பேல்.
' The Plaintiff bank is at Madras. The property to be attached now by this court is at Nagpur. How to execute the warrant of attachment?'
இது தான் கேள்வி். எனக்கு பதில் தெரியவில்லை. என் முகம் அவருக்குப் பாவமாக இருந்திருக்க வேண்டும்.

' How old are you in the bar?
' This is very first day milord'
' It is OK. I will give you an hour's time. Go to the library. Search the law. Come back and answer me. Don't ask any one until you find the answer...OK?

முதல் நாள். அந்தப் பிரம்மாண்டக் கட்டிடத்தில் எது எங்கே இருக்கிறது என்பதே தெரியாது. அங்கே இங்கே ஓடி யார் யாரையோ கேட்டு ஒரு வழியாக ஒரு நூலகத்தைக் கண்டு பிடித்து, அனுமதி வாங்கி, சட்டப் புத்தகங்களைப் புரட்டி.....அப்பாடா!

பத்தாவது நிமிடத்தில் முல்லா புண்ணியத்தில் விடை தெரிந்தது.
'Precept.'

அருகில் படித்துக்கொண்டிருந்த ஒரு வழக்குரைஞரிடம் தயங்கித் தயங்கி அது சரியா என்று கேட்டேன்.
விவரம் கேட்டார். அனைத்தும் சொன்னேன். 'சரி தான்' என்றார். Thank God என்று இருந்தது.
'Let us go...' என்ற படி அவரும் என்னுடன் கோர்ட்டுக்கு வந்தார். மிகச்சரியாக ஒரு மணி நேரம் கடந்து என்னை நீதிபதி பதில் கேட்க, நான் சொல்ல, 'good...keep it up' என்றார். A Conditional order was passed.

' How come she is here?' என்றார் சிரித்துக்கொண்டே என்னோடு வந்த அந்த வழக்கறிஞரைப் பார்த்து.

'No milord, he got the point answered from the book and he got it confirmed from me. That is all' என்றார் அந்த வழக்குரைஞர்.

Golden days. Gem of people.

அந்த நீதியரசர்:  Justice M. Srinivasan.
அந்த வழக்குரைஞர்:
Sumathi Venkatachari

Back to Madurai.

Quo vadis?

வனம்

புவியின்
அஞ்சல் பெட்டி.

இறைவன் உயர்த்திய
அபயக் கரத்தின்
நிழல்.

பூமித்தாய்
உவந்து அணியும்
பசுமைச் சீருடை.

மேகம் பூமிக்கு
பரிசளித்த
பச்சைக்கம்பளம்.

மேகத்தில் பிறந்து
பூமியை மணந்து
மரங்களைப்
பிரசவிப்பதால்
மழைக்கு
காடுகளே புகுந்தவீடு.

ஆனால் மானிடா,
காடுகளில்
ஆயுத பூஜை நடத்த
ஆயத்தமாவதை
நீ
இனியாவது நிறுத்து.

அருவியும் மலைகளும்
சோலைகளும்
நீ படைக்க முடியாதவை.

காடுகளை நம்
முன்னோர்
கடவுளென வணங்கினராம்.
நீ அவைகளைத்
தொழக்கூட வேண்டாம்.
தொடாமல்
இருத்தல் நலம்.

ராமனைப்போல
எல்லோரும்
வனவாசம்
அனுப்பப்படவேண்டும்.
அப்போது தான்
நமக்கு வனங்களின்
வசீகரம் தெரியும்.

மனிதா, நாளை
உன் குழந்தைகள்
உய்க்கவாவது
வனங்களை
வாழவிடு.

மண்ணில் தெரியும் வானம்

இயற்கை மங்கையின்
வளமே அவளது
அழகின் சிரிப்பு.
அவளில் மிகையாய்
வசீகரமானது
ஏதெனக் கேட்டால்
எதைச்சொல்வேன்?
எதை விடுவேன்?

அவளின்
அங்கமெல்லாம்
அள்ளும்  அழகு!
ஆயினும் முதலிடம்
என்று ஒன்று
எதிலும் உண்டுதானே?

ஆமெனில்
காரணம் சொல்லல்
அதனினும் இனிது.

என் காதல்
வானமும் வானம்
சார்ந்தவைகளின்
மீதுதான்.

வானம்.
ஆதவன்.
தண்மதி.
முகிலினம்.
மின்னல்.
இவை கூட்டணி
அமைத்து
நிகழ்த்தும் மாயம்.
ஒவ்வொன்றும்
வர்ணஜாலம்.

அது ஏன் வானம்?

சொல்கிறேன்.

வானம்
நிரந்தரமானது.
நிர்மலமானது.

அளவுகளுக்குள்
அடங்காதது.
அதிசயங்கள்
அடங்கியது.

இருந்த இடத்தில்
பார்க்கக்கிட்டுவது.
சேரிக்கும் சேட்டுக்கும்
பொதுவானது.

பரவசமானது.
ஆனாலும்
இலவசமானது.

கைக்கெட்டாததால்
கசங்காதது.
கூட்டணிக்கு
இயைவது.

அரசனாயிராத
எத்தனையோ
சித்தார்த்தர்கற்கு
போதிமரமானது.

பயணந்தோறும்
வழித்துணையானது.
தளர்ந்த மனதுக்கு
விசிறியானது.

எனக்கு
அந்த வானமே
தாய்மடியுமானது.

வினாக்கள்...கனாக்கள்...

விடை
பெற முடியாக் கேள்விகளே
விலகிச்செல்லுங்கள்.

வினாக்களால் ஆனது
இவ்வுலகம்.

இன்னும் கேட்கப்படாத
கேள்விகள்
எங்கெங்கிலும்.

உள்ளிருந்தும்
வெளியேயும்.

பின்னாலும்
முன்னாலும்.

காமம் முழங்கியும்
காதல் வேண்டியும்.

காதலை இகழ்ந்தும்
காலனைப் பழித்தும்.

அன்பால் தோய்ந்தும்
வெறுப்பை உமிழ்ந்தும்.

உரிமை கோரியும்
கடமை குறித்தும்.

ஏவப்படும்
கேள்விகளால்
முனகியது
மொழி.

அடுக்கப்பட்ட
கேள்விகளால்
முடங்கியது
மெளனம்.

கேட்கப்படாத
கேள்விகளால்
மரத்துப்போனது
மானிடம்.

மனிதனைக்
கேள்வி கேட்க
மறந்ததால்
மரித்துப்போனான்
கடவுள்.

நவீன நரகாசுரன்

இன்றும்
நினைத்தாலே
இனிக்கிறது
சிறுவனாக
கொண்டாடிய
தீபாவளி.

காலம் மாற
காட்சிகளும் மாற
அந்த கொண்டாட்டம்
இன்று இல்லைதான்.

ஆயினும் இது
வேறு வகை உவகை.

நாள் முடிந்து அகமகிழ்ந்து
மகள் உறங்க நான் மட்டும்
பின்னோக்கிப் பார்க்கிறேன்
விழித்தபடி.

எம் நாட்கள் ஏன்
இவர்களுக்கு கிட்டாது
போனதென ஏக்கமாய் 
கண்  துயிலும் பொழுதில்
தொலைந்து போனான்
நரகாசுரன்
தொலைக்காட்சியில்.

Sunday, 28 February 2016

அவனுக்கு ஏது மதம்?

http://m.tamil.thehindu.com/india/சாலை-விபத்தில்-உடல்-2-துண்டானபோதும்-உறுப்பு-தானம்-செய்ய-கெஞ்சிய-இளைஞர்/article8249534.ece
-----

பகிர மனமில்லைதான்.
ஆனாலும்
அங்கே துடித்தது
ஒரு மெய் மட்டுமல்ல.
மனிதம் என்ற
பொய்யும் தான்.

பிரிந்தது ஓர்
உடல் மட்டும் அல்ல.
மனிதன் கைவிட்ட
அபிமானமும் தான்.

அவன் குருதிக்கு
இனி இல்லை வகைப்பாடு.
அவன் தான் இப்போது
அதுவாகி விட்டானே,
இனியும் அவனுக்கு
மதமுண்டா நண்பர்களே?
இனமுண்டா அன்பர்களே?

அவனும் மனிதனாகத்தான்
நேற்று வரை
ரத்தமும் சதையுமாய்
நடமாடினான்.

என்ன செய்ய?

நம்மிடையே
அவனைப் போல
மனிதன் இன்னும்
அரிதாய்
வாழத்தான் செய்கிறான்.
ஆனாலும் தான்
ஒரு மனிதன் என்பதை
அவன் செத்துத்தான்
மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறது.

சொல்வதெல்லாம் உண்மை-13

அடுத்து என்ன செய்ய என்று புரியாமல் தவிக்கும் தருணங்கள் நம் எல்லோருக்கும் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட அப்படிப்பட்ட ஒரு அனுபவம் இது.

ஒருவர் ஒரு கத்தைக் காகிதங்களோடு என் அலுவலகம் வந்தார். 'பெரிய இடத்து' பரிந்துரை துணையுடன் வந்தார்.

தனது வழக்குரைஞர் மீது வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றார். 'நுகர்வோர் குறைதீர் மன்ற வழக்கென்றால் என்றால் அவ்வளவு சுலபமல்ல, எல்லா வழக்குரைஞர்- வழக்காடி பிரச்சினைகளும் நுகர்வோர் வழக்காகாதே' என்றேன்.  தீர்ப்பு தமக்கு சாதகமாக இல்லை என்றெல்லாம் குறை சொல்லி வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றேன். ஒருவேளை அந்த வழக்குரைஞர் அந்த வழக்கை நடத்தும் முறையிலும் தனது கடமையைச் செய்வதிலும் குறை இருந்தது என்றால் அதற்கு தக்க ஆதரவுகள் வேண்டுமே என்றேன்.
'அவ்வாறான வழக்கல்ல; அதற்கும் மேலே...' என்ற பீடிகையோடு ஆவணங்களைக் கொடுத்தார். படித்துப் பார்த்து விட்டு இந்த நிமிடம் வரை எந்த முடிவும் எடுக்காமல்  யோசித்தபடி( குழம்பியபடி?) இருக்கிறேன்.

அவருக்கு ஒரு சிவில் வழக்கு. எதிர் தரப்பு தன்னுடயை சொத்திற்கு நூதனப் பாத்தியம் கோருவதால் அச்சொத்து தனக்கு பாத்தியம் என்று அறிவிக்கக் கோரியும் அதில் உள்ள ஒரு கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்று தடையுத்தரவு கோரியும் அவ்வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார். இடைக்கால உத்தரவாக அந்தக் கட்டிடத்தை எதிர்தரப்பு இடிக்கக் கூடாது என்று ஒரு இடைக்கால தடை உத்தரவு அந்த நீதிமன்றம் தந்திருக்கிறது. ஆனால் அந்த உத்தரவை ஒரு குறிப்பிட்ட தேதி வரை மட்டுமே வழங்கி விட்டு அந்தத் தேதியன்று அந்த வழக்கை மறு வாய்தா ஏற்படுத்தியிருக்கிறார் அந்த நீதிபதி.

இந்தக் கட்சிக்காரரின் சோதனைக் காலம் அந்த வாய்தா தேதியன்று நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. வக்கீல் நலன் சம்பந்தப்பட்ட வலுவான காரணம் காட்டி அந்தப் போராட்டம். அந்த விவரம் அவருக்கு  தெரியாததால் அவர் அன்று நேரடியாக கோர்ட்டில் போய் ஆஜராகவில்லை.அவரது வக்கீலும் நீதிமன்றத்துக்குப் போகவில்லை.

அந்த நீதிபதியோ அந்த இடைக்காலத் தடை உத்தரவை மற்றொரு நாள் வரை நீட்டிக்கவுமில்லை. திரும்ப நீதிமன்றப் பணிகள் துவங்கிய போது இவரது வக்கீல் மன்றாடிக் கேட்டும் அந்த நீதிபதி அந்தத் தடையுத்தரவை நீட்டிக்க மறுத்துவிட்டார். அந்த நீதிமன்றம் அம்மனுவை சங்கதிகளின் அடிப்படையில் விசாரித்து அந்த தடை உத்தரவை நீக்கறவு செய்யவும் இல்லை. மனு இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது.

ஆனால் எதிர் தரப்பில் அந்த தடை உத்தரவு நீதிமன்றத்தால் நீட்டிக்கப்படாததால் அந்த உத்தரவு இனியும் அமலில் இல்லை என்று சொல்லி காவல் துறை உதவியுடன் அதிரடியாக அச்சொத்தில் உள்ள கட்டிடத்தை முழுதும் இடித்துவிட்டார்.

எனது கட்சிக்காரருக்கு தன் வக்கீல் மீது அளவு கடந்த கோபம். அவர் அன்று கோர்ட்-ஐ பாய்காட் செய்யாமல் இருந்திருந்தால் இந்த அளவுக்கு தனக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது, எனவே எல்லாவற்றுக்கும் தன் வக்கீலே முழுக் காரணம் என்று ஆத்திரம்.
அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லி பார் கவுன்சிலுக்கு நோட்டிஸ் அனுப்பியதி்ல் தனக்கு இதுவரை பதில் இல்லை என்கிறார்.

தன் வக்கீலுக்கு இழப்பீடு கோரி ஒரு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார். அந்த வக்கீலும் அனுப்பிய பதில் அறிவிப்போடு தான் உறுப்பினராக உள்ள பார் அசோஷியேஷன் மேற்சொன்ன நாளன்று அந்த நீதிமன்றத்தை பாய்காட் செய்ததற்கான தீர்மான நகலை இணைத்து அதன்படியே தான் அன்றைய தினம் நீதிமன்றத்தைப் புறக்கணிக்க வேண்டிவந்தது என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

அதோடு விடவில்லை இந்த நபர். வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வது சட்ட விரோதமானது என்ற ஒரு உச்சநீதிமன்ற தீர்முடிவைச் சுட்டிக் காட்டி ( யார் சொல்லிக் கொடுத்தாரோ?) மறுபடியும் வக்கீலுக்கு ஒரு ரிமைண்டர் அனுப்ப கடுப்பாகிப் போன அந்த வக்கீல் ஒரு மறுப்புரை அனுப்பி பாய்காட் அன்று தான் கோர்ட்டுக்குப் போயிருந்தால் தனக்கு பல 'அசம்பாவிதங்கள்' நடந்திருக்கும் என்றும் தான் பல பேரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியிருப்பேன் என்றும் விளக்கம் அளித்து தான் தாக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு என்றும் சொல்லியதோடு பாய்காட் அன்று தான் கோர்ட்டுக்குப் போனால் தமக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை என்றும் சொல்லிவிட்டு அந்தக் கைக்கட்டை இவருக்குத் திரும்பக் கொடுத்ததோடு தான் வாங்கிய மொத்த ஊதியத்தையும் திரும்ப இவரிடம் கொடுத்து விட்டார்.

இதில் சமாதானமடையாத இவர் அந்த வக்கீல் மேல் பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் தனது வீட்டை திரும்பக் கட்டும் செலவோடு நஷ்டஈடும் அவர் தரவேண்டும் என்று அவர் மீதும் சம்பந்தப்பட்ட பார் அசோஷியேஷன் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரி என்னிடம் ஆலோசனைக்கு வந்திருக்கிறார்.

உண்மையில் அன்றைய நடந்த நிகழ்வுகளுக்கும் அவருக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் யார் பொறுப்பு? யார் மீது தவறு?

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து விட்டு அதன் பிறகு அந்த மனுவில் விசாரணை ஏதும் ஏற்படாத போதும் இடைக்கால உத்தரவை நீட்டிக்காத நீதிபதி மீது தவறா?

வழக்கைத திறம்பட நடத்தித் தருகிறேன் என்று சொல்லி பைசா வசூல் செய்துவிட்டு பார் அஷோஸியேஷன் பாய்காட் தீர்மானம் போட்டவுடன் அன்றைய தினம் அந்த இடைக்கால உத்தரவை நீட்டிக்க நடவடிக்கை எடுக்காமல் வீட்டில் முடங்கிக் கொண்ட அந்த வக்கீல் மீதா?

நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் அறிவித்த பிறகு இத்தகைய உத்தரவுகளை நீட்டிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்காது போன அந்த ஊர் வக்கீல் சங்கத்தின் மீதா?

ஒரு வக்கீல் மீது இந்த மாதிரி புகார் வந்தால் என்ன நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்ற விதிகளை வரையறுக்க வேண்டிய பார் கவுன்சில்கள் மீதா?

தலை சுற்றவில்லை??

உங்கள் கருத்தில் இவர்கள் மீது அல்லது வேறு யார் மீது தவறு?அவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்?

என் கட்சிக்காரருக்கு என்ன பரிகாரம் தரப்படவேண்டும்?

சுகம்

குயிலென்னவோ
சுகமாகத்தான்
கூவுகிறது.
அது
மனிதனுக்கு மட்டும்
சோகமாகக் கேட்கிறது.

இயற்கையின் படைப்பில்
சிரிக்கத்தெரிந்தது
மனிதன் மட்டுமென
நமக்கு பெருமிதம்.

ஆயின்
இங்கே
அழுவதும்
அழ வைப்பதும்
வேறு யாராம்?

அடே மானிடா,
குயிலின் குரலுக்கு
சோகம் சேர்ப்பதை
நிறுத்து.
உன் மனதிற்கு
சுகம் சேர்த்துவிடு.

உலகம் அழகானது.
உயிர்கள் இனியன.

சருகு....

வலியைப் புகையாய்
மொழிபெயர்த்தேன்.
கனவுப் புகையை
உள்ளிழுத்தேன்.
நினைவுச்சாம்பல்
உதிர உதிர
உயிரிழந்ததென்
காதல்.

அவலம்

சில வருடங்களுக்கு முன்பு என் நண்பரிடமிருந்து ஒரு அவசர அழைப்பு. அவரது கணவர் மிக மோசமான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் உடனே அங்கு வர முடியுமா எனக் கதறல். சென்றேன்.

எனக்கு வழக்கறிஞர் நண்பர்களை விட மருத்துவர் நண்பர்களே அதிகம். ஒரு மருத்துவர் அவர் இறந்து விட்டதாகச் சொன்னார். என் நண்பர் அதை ஒப்புக் கொள்ள மறுத்து அழுது அரற்றி அடம் பிடித்துக் கதற ஒரே களேபரம்.
நான் சொன்னேன் "சொன்னாக் கேளும்மா, அம்மருத்துவர் என் நண்பர், சரியான தகவல் தான் சொல்லுவார்...". அவர் கேட்கவில்லை. அழுகை. கதறல். ஆவேசம். மயக்கம். தெளிந்த பின் மீண்டும் அழுகை. கதறல். ஆவேசம்.

வேறு வழியின்றி நான் சொன்னேன். அனுமதி வாங்கி மருத்துவரோடு சவக்கிடங்கில் அவர் கணவரைப் பார்த்து விட்டு வருகிறேன். என் மீது நம்பிக்கை உடையவர் அவர். சரி என்றார். நானும் மருத்துவரும் சவக்கிடங்கில் நுழைந்தோம்.

அங்கே சடலங்கள் தரையிலும் கட்டிலிலும் கிடத்தப்பட்டிருக்கும் கோலத்தையும் அக்கிடங்கின் நிலையையும் அங்கே வீசும் குடலைப் பிடுங்கும் நாற்றமும் கண்டு திகைத்துப் போனேன்.

Human Dignity கேள்விக்குள்ளாகும் இடம் சவக்கிடங்குகள்.

அழகாக ஆடை உடுத்தும் என் நண்பர் அங்கே ஆடையின்றி கிடத்தப்பட்டிருந்தார். எனக்கு அங்கே இருந்த நிர்வாணம் ஏதும் ஆபாசமாகத் தெரியவில்லை.

அவரைத் தொட்டுப்பார்தோம். அவர் அதுவாகியிருந்தார். சுவாசம் இல்லை. உடல் விறைத்துவிட்டது. சில்லென இருந்தது. இறப்பை மருத்துவர் ஊர்ஜிதம் செய்தார்.

ஒரு நிமிடத்தில் என் மனதில் 'அவனாக' இருந்தவர் எப்படி 'அதுவாக' மாற்றி உணரப்பட்டார் என்பது செவிட்டறையாக இருந்தது.

நாம் அவ்வளவுதானா?

உறைந்து போனேன்.

நண்பரிடம் பேசி உண்மையை உணரவைத்து வீடு வந்த பிறகு இன்று வரை மரணத்தை நான் புரிந்து கொள்ளத் தலைப்படவில்லை.

மூன்றாம் வகுப்பில் பயிலும் போது வகுப்புத் தோழன் ரவீந்திரன் பாம்பு கடித்து இறந்ததாக அறிந்தவுடன் வீட்டுக்குச் சொல்லாமல் சுடுகாடு சென்ற முதல் அனுபவம் தொடங்கி நிறைய நேரில் பார்த்த விபத்து மரணங்கள்,  கண்ணுக்கு முன்னே பிரிந்த மாமியின் உயிர், தீயில் வெந்து கரிக்கட்டையாய் விறைத்துப் போன மாமா மகளின் சடலம், திருவல்லிக்கேணியில் நடு ரோட்டில் கொலை செய்யப்பட்டு டயர் வைத்து எரிந்து கொண்டிருந்த ஒரு சடலம், கடற்கரையில் துப்பட்டாவால் கட்டுண்டு கரை ஒதுங்கிய காதல் ஜோடி, வள்ளலார் படம் போல சடலக்கூறாய்வு செய்யப்பட்டு கட்டிப்போடப்பட்ட சடலம்....

இன்னும் எத்தனையோ அனுபவங்கள் நம் எல்லோருக்குமே உண்டு.

பிரசவ வைராக்கியம், சாராய வைராக்கியம் போல மயான வைராக்கியமும் தங்காத ஒன்றாகிவிட்டது.

மரணம் சொல்லும் பாடம் மறுநாள் கூட நீடிப்பதில்லையே, ஏன்?

தெரியவில்லை. புரிவதில்லை.

மனிதனுக்கு தரும் மதிப்பு சடலத்துக்கு ஏன் இல்லை?

பாடையில் கிடத்தும்போதே 'அவர்' சட்டென 'பொணம்' ஆகிவிடுவது ஒரு அவலம் தானே?

மிகக் கொடுமையான மற்றொரு விஷயம் ஒன்று உண்டு.

சில வருடம் முன்பு விபத்தில் இறந்து போன நண்பரின் சடலக் கூறாய்வுக்கான மருத்துவரின் வருகைக்காக காத்திருந்தோம். மருத்துவர் வந்த பிறகும் கிடங்கின் கதவுகள் வெகு நேரம் திறக்கப்படவில்லை. ஏன் என்று கேட்டால் கிடைத்த வாய்ப்பை விடாமல் ஒரு பேராசிரியர் அனாடமி பாடத்தை செயல்முறை விளக்கமாக மருத்துவ மாணவர்களை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தால் கால தாமதம் என்றார்.

அதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியும். சடலத்தைக் கூறு போட்டு தைத்து துணிவைத்துக் கட்டிய பிறகு முகம் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் என் நண்பரை இறுதியாக ஒரு முறை பார்க்க 'ஏற்பாடு' செய்துவிட்டு உள்ளே போனவன் தீயை மிதித்தது போலத் துடித்துப் போனேன்.

அங்கே இருந்த மருத்துவ மாணவன் ஒருவன் அங்கே இருந்த பெண் சடலத்தின் மார்பகங்களைக் கிள்ளியபடி ஏதோ சொல்ல, அருகிலிருந்த மருத்துவ மாணவிகள் அதைக் கேட்டு ரசித்து சிரித்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன்.

அவ்வாறு செய்வது சிலர் மட்டும் தான் என்றாலும் இத்தகைய திரை மறைவில் ரகசியமாக நடக்கும் நிகழ்வுகள் நாம்  மருத்துவர்கள் மீதும் மருத்துவமனை மீதும்  மருத்துவமனை ஊழியர்கள் மீதும் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் அஸ்திவாரத்தில் ஏற்படுத்தும் விரிசல் இல்லையா?