Monday, 29 February 2016

வினாக்கள்...கனாக்கள்...

விடை
பெற முடியாக் கேள்விகளே
விலகிச்செல்லுங்கள்.

வினாக்களால் ஆனது
இவ்வுலகம்.

இன்னும் கேட்கப்படாத
கேள்விகள்
எங்கெங்கிலும்.

உள்ளிருந்தும்
வெளியேயும்.

பின்னாலும்
முன்னாலும்.

காமம் முழங்கியும்
காதல் வேண்டியும்.

காதலை இகழ்ந்தும்
காலனைப் பழித்தும்.

அன்பால் தோய்ந்தும்
வெறுப்பை உமிழ்ந்தும்.

உரிமை கோரியும்
கடமை குறித்தும்.

ஏவப்படும்
கேள்விகளால்
முனகியது
மொழி.

அடுக்கப்பட்ட
கேள்விகளால்
முடங்கியது
மெளனம்.

கேட்கப்படாத
கேள்விகளால்
மரத்துப்போனது
மானிடம்.

மனிதனைக்
கேள்வி கேட்க
மறந்ததால்
மரித்துப்போனான்
கடவுள்.

No comments:

Post a Comment