அவனும் அவளும்
எதிரெதிரே.
இடையில் அடர்ந்த அமைதி.
ஏன் என்ற
ஒற்றை வினாவை
துடிக்கும் உதடுகளால்
அவன் எறிந்தான்.
இதழ்களில் மெளனத்தையும் விழிகளில் ஈரத்தையும்
மொழியற்ற பதிலாக
கசிந்தபடி பிரிந்தாள் அவள். ஆண்டுகள் கழிந்தன
இருவரும் பிரிந்து.
குறிஞ்சி மலராய்
ஒரு நாள் சந்திப்பு.
ஏதொன்றும் தமக்குள் இல்லாதது போல் தேர்ந்து நடித்து முடித்தாயிற்று.
கடைசியில்
'பார்க்கலாம்' என
விடைபெற்றுப் பிரிகையில் 'பார்த்துக்கோ'
என்றது உதடுகள்.
வேறு ஏதோ சொன்னதாக உணர்ந்தது மனசு.
பார்க்காமலே இருந்திருக்கலாம் என்றது காதல்.
No comments:
Post a Comment